மோடியின் புது வியூகம்! "8 மாநிலங்கள்,99 தொகுதிகள்!" லோக்சபா தேர்தலுக்கு லிஸ்ட் 2ஐ ரெடி செய்யும் பாஜக
டெல்லி: விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இதற்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய நேற்று மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களின் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளது. பாஜக ஏற்கனவே முதலாம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், இப்போது அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஆலோசனை: இதற்கிடையே வரும் லோக்சபா தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை முடிவு செய்ய பாஜகவின் மத்திய தேர்தல் குழு நேற்று திங்கள்கிழமை தனது இரண்டாவது கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் குஜராத், மகாராஷ்டிரா, பீகார், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் இருந்து மொத்தம் 99 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை இரண்டாவது பட்டியலில் இடம்பெறலாம் என்றும், அவர் ஹாவேரி-கடக் தொகுதியில் இருந்து போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல மூத்த கட்சித் தலைவர்கள் உத்தேச வேட்பாளர் பட்டியலை ஆய்வு செய்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் பல்வேறு மாநில பாஜக தலைவர்களுடன் தொடர் கூட்டங்களை நடத்தி இந்த உத்தேச பட்டியலை இறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக லிஸ்ட்: முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் 195 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது. பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து களமிறங்கும் நிலையில், குஜராத்தின் காந்திநகரில் இருந்து அமித் ஷா மற்றும் போபாலின் குணாவிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் களமிறங்குகிறார்.
இருப்பினும், இந்த பட்டியலில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பெயர் இல்லை. இது பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், அவரது பெயர் அடுத்து வரும் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும் என்று கூறி பாஜக தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தென் மாநிலம்: தென் மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசத்தில் வேட்பாளர் தேர்வு குறித்து இதில் குறிப்பாக ஆலோசித்ததாகத் தெரிகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு- பவன் கல்யான் இடையேயான தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை மொத்தம் 25 தொகுதிகள் உள்ளன. அதில் தெலுங்கு தேசம் 17 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பவன் கல்யான் கட்சிக்கு இரண்டு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கடந்த 2018ஆம் ஆண்டு பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், மீண்டும் இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் திரும்பியுள்ளது. பாஜக வேட்பாளர் பட்டியலில் உள்ள வேட்பாளர்களில் இருவர் - போஜ்புரி பாடகர் பவன் சிங் மற்றும் உபேந்திர ராவத் - சர்ச்சைகள் காரணமாகத் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்களுக்கான மாற்று வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications