இந்த முறை கெஜ்ரிவால் வெல்வது ரொம்ப கஷ்டமாம்.. பாஜக இறக்கும் சக்கர வியூகம்! உட்கட்சி சர்வேயில் ஷாக்
டெல்லி: டெல்லியில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக சர்வேயில் கூறப்பட்டுள்ளது. இந்த முறை கெஜ்ரிவாலை வீழ்த்த பல வகையான வியூகங்கள் உடன் பாஜக களமிறங்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
டெல்லியில் ஆம் ஆத்மி கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. அங்கு அடுத்தாண்டு பிப். மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி- பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.

உட்கட்சி சர்வே: அதிலும் பாஜக இந்த முறை டெல்லியில் எப்படியாவது ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இதற்காக விரிவான தேர்தல் பிரச்சாரத்தை பாஜக உருவாக்கியுள்ளது. இதற்கிடையே பாஜக நடத்திய உட்கட்சி சர்வேயில் பாஜகவுக்குச் சாதகமான சில தகவல்கள் கிடைத்துள்ளது.
அதாவது டெல்லியில் கடந்த 2 சட்டசபைத் தேர்தல்களிலும் ஆம் ஆத்மி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. எதிர்க்கட்சிகளே இல்லை என்ற அளவுக்கு அதிக இடங்களை வென்றது. ஆனால், இந்த முறை அதே அளவுக்கு ஆம் ஆத்மியால் வெற்றி பெற முடியாது. டெல்லியில் இந்த முறை போட்டி கடுமையாக இருப்பதாக பாஜக நடத்திய உட்கட்சி சர்வேயில் தெரிய வந்துள்ளதாம்.
வியூகம்: அதில் தற்போது ஆம் ஆத்மிக்கு சற்று ஆதரவான மனநிலை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் ஆம் ஆத்மியை வீழ்த்த பக்கா வியூகத்தோடு பாஜக களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக டெல்லி பாஜக வட்டாரங்கள் ஆங்கில ஊடகமான பிரிண்ட் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "டெல்லியில் மொத்தம் 70 சீட் இருக்கும் நிலையில், அதில் ஆம் ஆத்மிக்கு சாதகமான சூழல் 40 இடங்களில் உள்ளன. பாஜகவுக்கு சாதகமான சூழல் 30 இடங்களில் உள்ளன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பாஜகவுக்கு சாதகமான ஒரு போக்கே ஏற்பட்டுள்ளது. வரும் காலத்திலும் இந்த இடைவெளி குறையும் என்றே நம்புகிறோம்" என்றார்.
யுக்தி: போட்டி கடுமையாக இருக்கும் நிலையில், பல்வேறு பிரச்சார யுக்திகளை பாஜக வகுத்துள்ளது. குறிப்பாக கெஜ்ரிவால் மீது ஊழல் புகாரை எழுப்ப உள்ளது டெல்லியில் ஆட்சிக்கு வந்த பிறகு கெஜ்ரிவால் உண்மையில் எப்படி ஊழலில் ஈடுபட்டார் என்பதை வெளிப்படுத்த ஷீஷ் மஹால் விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. அதாவது டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவாலின் குடியிருப்பில் உள்ள ஆடம்பரத்தை ஷீஷ் மஹால் என்று பாஜக விமர்சித்து வருகிறது.
பாஜக மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா இன்று இது தொடர்பான வீடியோ ஒன்றையும் பகிர்ந்து இருந்தார். அது கெஜ்ரிவாலின் குடியிருப்பில் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட வீரேந்திர சச்தேவா, "கெஜ்ரிவால் குடியிருப்பில் உள்ள மார்பிள் கிரானைட், விளக்கு விலை ரூ. 1.9 கோடி, ஜிம் மற்றும் ஸ்பா செட் அப் மதிப்பு ரூ. 1.5 கோடி" என்று விமர்சித்துள்ளார். வரும் காலத்தில் இதுபோல பல வீடியோக்களை வெளியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கெஜ்ரிவால் தன்னை ஊழலுக்கு எதிரானவரான சாதாரண மனிதர் என்று முன்னிலைப் படுத்தும் நிலையில், அதை மொத்தமாக காலி செய்யவே பாஜக இந்த திட்டத்தைப் போட்டுள்ளது. இதுபோல ஆம் ஆத்மியின் அடிப்படை கொள்கைகளைக் கேள்வி எழுப்பும் பிரச்சார யுக்தியுடன் பாஜக களமிறங்குகிறது.
கடந்த தேர்தல்: கடந்த 2020 தேர்தலிலேயே பாஜகவுக்கு வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்து இருந்தது. 2015ல் பாஜக 32.3 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், 2020ல் அது 38.51ஆக அதிகரித்தது. இருப்பினும், இந்த தேர்தலில் 8 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற முடிந்தது. ஆனால், இந்த முறை வாக்கு சதவிகிதம் மட்டுமின்றி தொகுதிகளையும் அதிகம் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது.












Click it and Unblock the Notifications