பாஜகவையும் உலுக்கும் "அது".. பரிந்துரை லிஸ்ட்டைப் பார்த்து ஷாக் ஆன டெல்லி.. !
சென்னை: சர்வதேச அரசியலரங்கையும் அதிர வைக்கும் வகையில் ஆர்ப்பரிப்பான வெற்றியை மீண்டும் பெற்று, ஆட்சியை தக்க வைத்துள்ளது பி.ஜே.பி. இந்த செய்தி கூட கொஞ்சம் பழங்கஞ்சிதான். காஷ்மீர் விவகாரத்தில் மோடி - அமித்ஷா கூட்டணி எடுத்த அதிரடி முடிவுகளோ தேசிய அரசியல் வரலாறே அதிச்சி கலந்த ஆச்சரியத்துடன், பதிந்து கொள்ளும் அளவிலான நடவடிக்கையாக அமைந்துள்ளன.
இப்படியான அதிர்வுகளை உருவாக்கும் பி.ஜே.பி.யின் முகத்தில் பக்கா திருஷ்டிப் பொட்டாக அமைந்து கொண்டிருக்கிறது தமிழக பி.ஜே.பி! என்கிறார்கள் விமர்சகர்கள். காரணம்?...சொல்லித் தெரியவேண்டியதில்லை. கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தலை கீழாக நின்று தண்ணீர் ஊற்றிப் பார்த்துவிட்டார்கள் தமிழகத்தில் தாமரை மலர்வதற்கான எந்த அறிகுறியுமே இல்லை.
அட மோடி, அமித்ஷாவே ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு இங்கே போட்டியிடுவார்களா? என்பதே பெரிய டவுட்டாக இருக்கிறது. அந்தளவுக்கு தமிழகத்தில் கட்சியின் நிலைமை சோர்ந்து கிடக்கிறது. இந்த சூழலில் தமிழக பி.ஜே.பி.யின் தலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் அதிரிபுதிரியாக துவங்கிவிட்டன என்று தகவல்கள் தடதடக்கின்றன.
தமிழிசைக்கு அடுத்த தலைவர் யார்
தமிழிசைக்கு அடுத்த தலைவர் யார்? எனும் கேள்விக்கு என்னதான் டெல்லி மேலிடம் ஒரு பதிலை வைத்திருந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட தமிழகத்திலிருந்து என்ன பதில் வருகிறது? இரண்டையும் கிராஸ் செக் செய்து பார்க்கலாமே! எனும் அடிப்படையில் தமிழக பி.ஜே.பி.யின் முக்கிய புள்ளிகளுக்கு இந்த அஸைன்மெண்டை கொடுத்து, ‘தமிழகத்தில் நம் இயக்கத்தை வழி நடத்த தகுதியான மூன்று பேரை சிபாரிசு செய்து அனுப்புங்களேன்' என்று கேட்டார்களாம்.
சிபாரிசு
பரம ரகசியமாய் வைக்கப்பட வேண்டிய இந்த செய்தி, தலைவர் ரேஸில் இருப்போரின் கவனத்துக்கும் போய்விட, அவர்களும் இந்த பரிந்துரைக் குழுவினரிடம் ‘என்னையும் குறிப்பிடுங்க. அதுவும், முதல் ஆளாக' என்று சிபாரிசுக்கு நின்றிருக்கின்றனர். அந்த குழுவும் அலசலை முடித்து, ஃபைலை மேலே அனுப்பியுள்ளது.
சாதிமயம்
ஓப்பன் பண்ணி வாசித்த டெல்லி பி.ஜே.பி. தலைமைக்கு செம்ம கடுப்பு. காரணம்? நான்கு பேரின் பெயர்களை அந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்ற காரணத்தையும், அவர்களை ஏன் பரிசீலிக்கலாம்? என்பதையும் ‘சாதி' என்பதை அடிப்படையாக கொண்டே விவரித்திருக்கிறார்கள். சரி அப்படி அந்த லிஸ்டில் யார் யார் இருக்கிறார்கள், தலைமை கோபப்படுமளவுக்கு என்ன பிரச்னை அந்த பரிந்துரை ஃபைலில் இருந்தது? என பி.ஜே.பி.யின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது "உங்களது தகவல் சரியே. மொத்தம் நான்கு பேரின் பெயர்கள்தான் அதில் இருந்தன. அவை, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன்! ஆகியோரே.
என்ன இது
இந்த லிஸ்டில் வானதி மட்டுமே ஓரளவு இளம் ரத்தம். பொன்னாரும், சி.பி.ஆரும் கட்சியின் அதிகார மையங்களாக வலம் வந்துவிட்டனர். நயினார் நாகேந்திரன் கட்சிக்கு புதியவர். இதையெல்லாம் கவனித்துக் கூட தலைமை அப்செட் ஆகவில்லை. ஆனால் இவர்களை பற்றிய விளக்கத்தில் இவர்களின் திறமை உள்ளிட்டவைகளை குறிப்பிடாமல் ஒவ்வொருவரின் சாதி, அதற்கு தமிழகத்தில் இருக்கும் பலம், எந்த சாதி எந்த ஏரியாவில் எவ்வளவு உள்ளது, இவர்களை தலைவராக்கினால் மற்ற சாதி கொந்தளிக்குமா? எந்த சாதியை சேர்ந்தவர் தலைவரானால் கட்சிக்கு ஒரு கெத்து!? என்றெல்லாம் விளக்கியுள்ளனர்.
தலைமை ஷாக்
இதைப் பார்த்துதான் கடுப்பான தலைமை ‘சாதியை பார்த்து பதவி கொடுக்க நாம என்ன அந்தக் கட்சியா.. அந்த கட்சிக்கு முட்டுக் கொடுத்து, முட்டுக் கொடுத்து கடைசியில அவங்களை மாதிரியே அரசியல் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா? அந்தக் கட்சியில்தான் தெற்கு சாதிக்கும், கொங்கு சாதிக்கும் நடுவுல யுத்தம் நடக்குது. அதே நிலைமை இங்கேயும் வரணுமா? வெட்கம்' அப்படின்னு செமத்தியா திட்டிடுச்சு தலைமை.
சாதி இல்லாமல் இல்லையே
சரி பரிந்துரை கமிட்டியும் என்னதான் பண்ணுவாங்க, தலைவர் ரேஸில் நிற்கிறவங்களும் தங்களோட சாதி பலத்தை சுட்டிக் காட்டித்தான் தங்களோட வெயிட்டேஜை குறிப்பிடுறாங்க. தமிழகத்தில் அந்த லெவலுக்கு ஆகிடுச்சு கட்சியோட நிலைமை. வெறும் ‘பாரத் மாதா கி ஜே!' என்பது தமிழக பி.ஜே.பி.யை கைதூக்கி விடாது, அதுக்கும் மேலே வேணும் போல!" என்று நிறுத்தினார்.
- ஜி.தாமிரா