பாஜக எம்பி கவுதம் காம்பீருக்கு கொலை மிரட்டல்.. பாதுகாப்பு கேட்டு போலீஸில் புகார்
டெல்லி: பாஜக எம்பி கவுதம் காம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர்தான் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார்.

அவர் அத்தொகுதியில் வெற்றியும் பெற்றுவிட்டார். வாக்குச் சேகரிக்கும் போதிலிருந்தே சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் டெல்லி முழுவதும் காற்று மாசால் அவதி அடைந்தது.
அப்போது நாடாளுமன்றத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் காம்பீர் பங்கேற்காமல் வங்கதேசத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிக்கு வர்ணனையாளராக சென்றுவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காம்பீரை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மேலும் அவர் ஜிலேபி சாப்பிட்டு கொண்டிருந்த புகைப்படங்களும் வெளியாகின. இதனால் கடுப்பான காம்பீர், நான் ஜிலேபி சாப்பிடாமல் இருந்தால் காற்று மாசு சரியாகிவிடுமா என எதிர்கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக காம்பீர் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஷாதாரா மாவட்ட துணை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறுகையில் சர்வதேச எண்ணிலிருந்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க காம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வழக்குப் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications