மோடி ஓய்வு? அப்போ 150 இடங்களை கூட தாண்ட முடியாது.. பாஜகவின் நிஷிகாந்த் துபே பரபர!
டெல்லி: பாஜக தேர்தல் வெற்றிக்குப் பிரதமர் நரேந்திர மோடியின் பங்கு மிக முக்கியமானது என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கூறினார். முன்னதாக பாஜகவுக்கு வாக்களிக்காத பல்வேறு பிரிவினரும் தற்போது கட்சிக்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடி இல்லை என்றால் பாஜக 150 இடங்களைக் கூட தாண்டாது என்றார். மோடி இந்தாண்டு உடன் ஓய்வு பெறுவார் எனச் சொல்லப்பட்டு வரும் நிலையில், அது குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தாண்டு உடன் 75 வயதாகிறது. பாஜகவில் கடந்த காலங்களில் அத்வானி தொடங்கி பலரும் 75 வயதில் ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். இதனால் மோடியும் இந்தாண்டு உடன் ஓய்வு பெற உள்ளதாக எதிர்க்கட்சிகள் பேசத் தொடங்கியுள்ளன. இது தேசிய அரசியலில் கவனம் பெறும் நிகழ்வாக மாறியிருக்கிறது.

மோகன் பகவத்
அதேநேரம் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆர்எஸ்எஸ் தரப்பில் இது குறித்துப் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், 75 வயதானவுடன் தலைவர்கள் ஓய்வு பெற்றுவிட்டு அடுத்தவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று பேசியிருந்தார். அவர் தனது பேச்சில் மோடியின் பெயரை குறிப்பிடவில்லை என்ற போதிலும், மோடிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே அவரது பேச்சு இருந்ததாகப் பலரும் கூறினர்.
இதற்கிடையே நாடாளுமன்றத்தில் பாஜகவின் முக்கிய குரல்களில் ஒருவராக இருக்கும் நிஷிகாந்த் துபே, பிரதமர் மோடியின் தலைமை இல்லாமல் பாஜக வெற்றி பெற முடியாது என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மோடி இல்லாமல் பாஜகவால் வெல்ல முடியாது என்றும் பாஜகவின் வெற்றிக்குப் பிரதமர் மோடியின் தலைமை மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் தலைமையின் மீதான நம்பிக்கையே பாஜகவின் வெற்றிக்குக் காரணம் என்றும் துபே கூறினார்.
150 இடங்களைத் தாண்ட முடியாது
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகியுள்ளார். மோடி எங்கள் தலைவராக இல்லையென்றால், பாஜக 150 இடங்களைக் கூட வெல்ல முடியாது" என்று நிஷிகாந்த் துபே தெரிவித்தார். பிரதமர் மோடி 2014 முதல் பிரதமராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது. பாஜக 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மோடி வேண்டும்
தொடர்ந்து பேசிய அவர், "எப்போதுமே பாஜகவுக்காக வாக்களிக்காத ஏழை மக்கள் உள்ளிட்டோர் கூட மோடி வந்த பிறகு, பாஜகவுக்கு வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர். சிலருக்கு இது பிடிக்கலாம் அல்லது பிடிக்காமலும் போகலாம், ஆனால் இதுதான் உண்மை. பிரதமர் மோடி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே கட்சியின் வெற்றிக்குக் காரணம். 2029 லோக்சபா தேர்தலிலும் மோடியின் தலைமையில் தான் பாஜக போட்டியிட வேண்டும். ஒரு கட்சித் தொண்டனாக மோடியின் தலைமை எங்களுக்குத் தேவை என்று நான் நம்புகிறேன்.
நான் சொல்வது சர்ச்சையாக வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அதுவே கள நிலவரம். அதை தான் சொல்கிறேன். மோடியின் பெயர் ஒன்றே கட்சிக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்றால், அது அவரது தலைமைக்கும், மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் சான்றாகும். 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய அவரது உடல் ஒத்துழைக்கும் வரை அவரது தலைமை எங்களுக்குத் தேவை" என்று அவர் மேலும் கூறினார்.
மோடி ஓய்வு பெற தேவையில்லை
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் 75 வயதில் பதவியில் இருந்து விலகுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த துபே, "மோடி அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. பாஜகவுக்கு அவர் தேவை. ஒரு அரசியல் கட்சி ஒரு தனிமனிதனின் ஆளுமையை வைத்தே இயங்குகிறது" என்றார். மற்றொரு கேள்விக்கு துபே, "அடுத்த 15-20 ஆண்டுகளுக்குப் பிரதமர் மோடிதான் தலைவராக இருப்பார்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications