மக்கள் நம்பிக்கையை அதிகரிக்க.. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட.. பாஜக எம்பி, திரிணாமுல் காங். எம்எல்ஏ
டெல்லி: கொரோனா தடுப்பூசி குறித்து நம்பிக்கையை மக்களிடையே அதிகரிக்க பாஜக எம்பி மகேஷ் ஷர்மாவும், திரிணாமுல் காங். எம்எல்ஏ ரவீந்திரநாத் சாட்டர்ஜியும் இன்று கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டனர்.
இந்தியாவில் இன்று காலை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி சுகாதார ஊழியர்களும் இரண்டு கோடி முன்களப் பணியாளர்களும் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் சுமார் மூவாயிரம் தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் தடுப்பூசி
இதற்கான சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயேடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. பாரத் பயோடெக் நிறுவனம் சொந்தமாக கோவாக்சின் என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது.
பொதுமக்கள்
இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பூசி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக இருக்கும் மனிஷ் குமார் என்பவருக்குச் செலுத்தப்பட்டது. இருப்பினும், கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே நம்பிக்கை ஏற்படவில்லை. சில இடங்களில் சுகாதார ஊழியர்களும்கூட கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை.
தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் தலைவர்கள்
அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளில் அந்நாட்டு அரசியல் தலைவர்கள் மக்கள் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதன் மூலம் மக்களுக்குத் தடுப்பூசி குறித்த நம்பிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இந்தியாவிலும் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
தடுப்பூசி எடுத்துக்கொண்ட பாஜக எம்பி
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் கவுதம் புத்த நகர் பகுதியின் பாஜக எம்பி மகேஷ் ஷர்மா இன்று காலை 11 மணியளவில் மக்கள் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். 61 வயதாகும் மகேஷ் ஷர்மா, இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட முதல் அரசியல்வாதி என்ற பெயரையும் பெற்றார். மகேஷ் ஷர்மா நோய்டாவிலுள்ள மருத்துவமனையில் தடுப்பூசி பெற்றார்
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்
இது குறித்து மகேஷ் ஷர்மா தனது டிவிட்டரில், "உலகின் மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் பணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கினார். இதன் மூலம் கொரோனா வைரசுக்கான முடிவு தொடங்கியுள்ளது. ஒரு டாக்டராக, நான் இப்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நான் நன்றாக உணர்கிறேன். தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. நீங்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ
அதேபோல மேற்கு வங்க மாநிலம் பூர்பா பர்தாமன் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ரவீந்திரநாத் சாட்டர்ஜியும் கொரோனா தடுப்பூசியை இன்று எடுத்துக்கொண்டார். மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இருவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.