ராமர் மட்டும் இப்போ வாழ்ந்தா அவர் வீட்டுக்கும் பாஜக ED, CBI ரெய்டை ஏவி இருக்கும்: கெஜ்ரிவால் அட்டாக்
டெல்லி: ராமர் இன்றைய காலகட்டத்தில் வாழ்ந்திருந்தால் பாஜக அவர் வீட்டிற்கும் அமலாக்கத்துறை, சிபிஐ-ஐ அனுப்பியிருக்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவையில் கடந்த திங்களன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் குறித்த விவாதம் இன்று (மார்ச் 9) நடைபெற்றது. அப்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், "இன்று டெல்லியின் பட்ஜெட் மீதான விவாதத்தை நடத்தி வருகிறோம். இன்று நமது சகோதரர் மனீஷ் சிசோடியாவை நினைவுகூர விரும்புகிறேன். இது நமது 10வது பட்ஜெட் கூட்டத்தொடர், 9 பட்ஜெட்களை மனீஷ் சிசோடியா தான் தாக்கல் செய்தார். 11வது பட்ஜெட் தாக்கலின் போது அவர் நம்முடன் இருப்பார் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

பழி வாங்க: மேலும், இந்த பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என மக்கள் கூறுகின்றனர் எனத் தெரிவித்தார். மேலும், மத்திய விசாரணை ஏஜென்சிகள் மூலம் பாஜக அரசு எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் நோக்கில் நடந்துகொள்வது குறித்து விமர்சித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், "என்னை கைது செய்து சிறைக்கு அனுப்புவதன் மூலம் எனது அரசாங்கத்தை கவிழ்க்க பாஜக திட்டம் தீட்டியது. நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதி என எனக்கு பல நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எனக்கு 8 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். நான் டெல்லியில் 8 புதிய பள்ளிகளை கட்டப் போகிறேன்" என்றார்.
ராமர் இப்போது வாழ்ந்திருந்தால்: மேலும் பேசிய கெஜ்ரிவால், "இன்றைய கால கட்டத்தில் ராமர் வாழ்ந்திருந்தால், அவர் வீட்டிற்கும் பாஜக அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை ஏஜென்சிகளை அனுப்பி, அவரது நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து பாஜகவில் சேர்கிறீர்களா அல்லது சிறைக்குச் செல்கிறீர்களா எனக் கேட்டிருப்பார்கள்" என விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications