நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் முதல் முறையாக பெரும் சரிவு
டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் சில ஆண்டுகளில் முதல்முறையாக கணிசமான சரிவை சந்தித்துள்ளது. பாஜகவுக்கு ராஜ்யசபா எம்பிக்கள் பலம் 86 ஆக சரிந்துள்ளது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு தான் அந்த கட்சி மிகப்பெரிய எழுச்சி பெற்றது. அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தலிகளில் வென்றது. இதனால் ராஜ்யசபாவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்தது. அடுத்தடுத்து வென்று கொண்டே வந்த பாஜகவின் ராஜ்யசபா பலம், கடந்த 2022-ம் ஆண்டில் முதல் முறையாக சதத்தை கடந்தது.

நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 101 உறுப்பினர்கள் பாஜகவினராக இருந்தனர். இது தவிர கூட்டணி கட்சிகளின் எம் பிக்கள் மற்றும் வெளியில் இருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் போன்ற கட்சிகளின் ஆதரவு காரணமாக ராஜ்யசபாவில் பாஜக கொண்டு வந்த எல்லா மசோதாக்களுமே மிக எளிதாக நிறைவேறின. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடங்கி கடைசியாக ஐபிசி சட்டங்களை நீக்கிவிட்டு பாரதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதுவும் அதிரடியாக நிறைவேறியது.
மத்தியில் எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் உள்ள லோக்சபா மற்றும் மாநில எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்ட ராஜ்யசபா எம்பிக்கள் ஆகிய இரு தரப்பு ஆதரவு இருந்தால் தான் சட்டங்களை நிறைவேற்ற முடியும்.
மத்தியில் முழு மெஜாரிட்டி இருந்தாலும், ராஜ்யசபாவில் போதிய பலம் இல்லாவிட்டால் சட்டங்களை நிறைவேற்ற முடியாது. எந்த ஒரு சட்டமும் லோக்சபாவில் மட்டுமின்றி ராஜ்யசபாவிலும் நிறைவேற வேண்டும். அப்போதுதான் சட்டமாக்க முடியும். அந்த வகையில் ராஜ்யசபாவில் அசுர பலத்துடன் மாறிய பாஜகவிற்கு தற்போது எம்பிக்கள் பலம் கணிசமாக குறைந்துள்ளது.
எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில ஆண்டுகளில் முதல் முறையாக 86 என்கிற அளவுக்கு குறைந்துள்ளது. . இதனால் மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. சில கூட்டணி கட்சிகளும் இனி பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதிமுக போன்றவை இனி பாஜகவை ஆதரிக்க வாய்ப்பு இல்லை. அந்த வகையில் பாஜகவிற்கு சில சரிவுகள் உள்ளது.
தற்போது ராஜ்யசபாவில் 19 இடங்கள் காலியாக உள்ளன. மீதமுள்ள 226 உறுப்பினர்களில் பா ஜனதாவுக்கு 86 இடங்களும், காங்கிரசுக்கு 26 இடங்களம், திரிணாமுல் காங்கிரசுக்கு 13 இடங்களும் உள்ளன. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜ்யசபா எம் பி பதவியை ராஜினாமா செய்தவர்கள் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த பி.ஆர்.எஸ். எம் பி காங்கிரசில் இணைந்ததன் மூலம் 11 இடங்கள் காலியாகி இருக்கிறது. இதுதவிர காஷ்மீரில் தற்போது சட்டசபை இல்லாததால் அங்குள்ள 4 இடங்கள் காலியாகி உள்ளது. மேலும் நியமன உறுப்பினர் 4 பேரின் பதவிக்காலம் நிறைவு ஆகியவற்றாலும் இந்த காலியிடங்கள் ஏற்பட்டு உள்ளன.
எனவே ராஜினாமா செய்த எம்பிக்களால் காலியான 11 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அத்துடன் 4 நியமன உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமிக்க உள்ளது. இதன் மூலம் பாஜகவின் பலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் காலியிடம் ஏற்பட்டுள்ள மகாராஷ்டிரா, பீகார், அசாம், ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் திரிபுராவில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளே ஆட்சியில் உள்ளன. இதன் மூலம் அங்கு காலியாகும் 10 இடங்களில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளே வெற்றி பெறும். தெலுங்கானாவில் உள்ள ஒரு காலியிடம் காங்கிரஸ் வெல்ல வாய்ப்பு உள்ளது. எனவே இடைத்தேர்தலுக்குப்பின் பா ஜனதாவின் பலம் கணிசமாக அதிகரிக்கும், அதேநேரம் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மசோதாக்களை ராஜ்யசபாவில் வழக்கம் போல் நிறைவேற்ற முடியும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications