சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்.. மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி.. 9 பேரை தேடும் பணி தீவிரம்
போபால்: மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பர்கி அணைப்பகுதிக்கு இன்று 30 பேர் படகில் சுற்றுலா சென்றிருந்தனர். இந்த நிலையில் திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை 15 பேர் மீட்கப்பட்டனர்.. மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
மத்திய பிரதேசம் மாநிலம், நர்மதா நதிப்படுகையின் பர்கி அணை நீர் தேக்கத்தில் இன்று சுற்றுலா பயணிகள் பலரும் படகு சவாரி மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் 30 சுற்றுலாப் பயணிகள் படகில் பர்கி அணையில் படகு சவாரி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பலத்த காற்று வீசியது. திடீரென வீசிய பலத்த காற்று காரணமாக, படகு நிலைத்தடுமாறி கவிழ்ந்து அணையில் மூழ்கியது. இதனால் மகிழ்ச்சியுடன் படகு சவாரி மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள் தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் தத்தளித்தனர். தகவல் அறிந்ததும், அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தண்ணீரில் சிக்கிய 15 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைகளில் சேர்த்தனர். ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் ராகவேந்திர சிங் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர். மாநில அரசு, மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் சிறப்பு மீட்புப் பிரிவுகளை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளது.
இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 11 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தநிலையில் மேலும் 2 பேர் பலியாகியது தெரியவந்தது. இதனால் படகு விபத்தில் 6 பேர் பலியானது தெரியவந்துள்ளது. மேலும் 9 பேர் தண்ணீரில் மூழ்கியதாகவும் அவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சுற்றுலா சென்ற இடத்தில் 6 பேர் தண்ணீரில் முழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications