மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! மர்மநபர்கள் அச்சுறுத்தல்.. டெல்லியில் பரபரப்பு
டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கும், இரண்டு மருத்துவமனைகளுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கும், புராரி மற்றும் மங்கோல்புரியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

மிரட்டல்கள் மின்னஞ்சல் வழியாக வந்திருக்கின்றன. இது தொடர்பாக தீயணைப்பு துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் திடீர் அதிரடி சோதனையை நடத்தினர். இந்த சோதனையில் தற்போது வரை வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இந்த மிரட்டல் புரளி என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் குறிதது பேசிய டெல்லி தீயணைப்பு துறையினர், "வெடிகுண்டு மிரட்டல் குறித்து புராரி மற்றும் மங்கோல்புரியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் இருந்து புகார்கள் வந்தன. புகாரையடுத்து நாங்கள் தீவிர சோதனையில் இறங்கினோம். ஆனால் எங்களுக்கு அப்படி எதுவும் கிடைக்கவில்லை. காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. அதாவது கடந்த மே 1ம் தேதி டெல்லியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் பெற்றோரை வரவழைத்து அவசர அவசரமாக மாணவர்களை பள்ளி நிர்வாகம் வெளியேற்றியது.
சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு குழு மற்றும் தீயணைப்பு துறையினர் பள்ளிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளிகளுக்கு போலியான மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரியவந்தது.
தற்போதைய வெடிகுண்டு மிரட்டலுக்கும், இப்போதைய மிரட்டலுக்கும் இடையே ஓர் ஒற்றுமை உண்டு. அதாவது இரண்டு மிரட்டல் சம்பவங்களும், ரஷ்ய மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சம்பவங்களுக்கும் முன்னதாக ஏப்.30ம் தேதி டெல்லியின் சில மருத்துவமனைகளுக்கு இதேபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது என டெல்லி காவல்துறை அதிகாரி ரவீந்தர் யாதவ் கூறியுள்ளார்.
தொடர் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் குறித்து போலீசார் மற்றும் புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications