காங்கிரஸுக்கு ‘நாக் அவுட்’ பஞ்ச்.. பாஜகவுக்கு தாவிய பாக்சர் விஜேந்தர் சிங்.. திடீர் ஜம்ப்!
டெல்லி: குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், இன்று பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்த விஜேந்தர் சிங் கடந்த 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில், தற்போது பாஜகவில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கடந்த 2019ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த விஜேந்தர் சிங், 2019 லோக்சபா தேர்தலில் தெற்கு டெல்லியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.

ஆனால், பாஜகவின் ரமேஷ் பிதுரியிடம் தோல்வியடைந்தார் விஜேந்தர் சிங். டெல்லி தெற்கு லோக்சபா தொகுதியில் விஜேந்தர் சிங் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலிலும் விஜேந்தர் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டு வந்தது.
மதுரா தொகுதியில் ஹேமமாலினியை எதிர்த்து விஜேந்தர் சிங் களமிறக்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகி இன்று பாஜகவில் இணைந்துள்ளார் விஜேந்தர் சிங்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் விஜேந்தர் சிங் தன்னை பா.ஜ.கவில் இணைத்துக் கொண்டார். அவரை கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்ததும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த சிறிது நேரத்திலேயே, "தேசத்தின் நலனுக்காகவும், மக்களுக்கு சேவை செய்வதற்காகவும் பாஜகவில் இணைந்தேன். மேலும் மேலும் மக்களுக்கு உதவ விரும்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார் விஜேந்தர் சிங்.
விஜேந்தர் சிங் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது சொந்த மாநிலமான ஹரியானா மற்றும் மேற்கு உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் பல தொகுதிகளில் குறிப்பிடத்தக்க அரசியல் செல்வாக்கு பெற்ற சமூகத்தவராக ஜாட் சமூகத்தினர் உள்ளது குறிப்பிடத்தக்கது. விஜேந்தர் சிங்கிற்கு பாஜகவில் லோக்சபா சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications