பட்டியலின, பழங்குடியின பெண் தொழில்முனைவோருக்கு ரூ 2 கோடி வரை கடன் திட்டம்! பட்ஜெட்டில் அறிவிப்பு
டெல்லி: பட்டியலின, பழங்குடியின பெண் தொழில்முனைவோர் 5 லட்சம் பேருக்கு தலா ரூ 2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2025- 2026 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்த போது கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குறித்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பினர்.

பிறகு நிர்மலா சீதாராமனை பேச விடாமல் கூச்சலிட்டனர். எனினும் அமளிக்கு மத்தியில் அவர் பட்ஜெட் உரையாற்றி வருகிறார். அவர் கூறுகையில் கிஷான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
பட்டியலின, பழங்குடியின பெண் தொழில் முனைவோர்களாக 5 லட்சம் பேருக்கு தலா ₹2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். இந்திய அஞ்சல்துறை லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
மாநிலங்கள் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ 1.50 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தொடர்பான படிப்புகளுக்கு 3 சிறப்பு மையங்கள் ₹500 கோடியில் அமைக்கப்படும். அது போல் விவசாயத்திலும் செயற்கை நுண்ணறிவு புகுத்தப்படும். குழாய் மூலம் குடிநீர் அளிக்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028ஆம் ஆண்டு வரை நீடிக்கப்படும்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது. உலக அளவில் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications