ராஜஸ்தானில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.. பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்! மீட்பு பணி தீவிரம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் 15 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இரவு 9 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், மீட்பு பணிகள் நள்ளிரவை தாண்டியும் நீடித்து வருகிறது.
ராஜஸ்தான் மநிலம் கோட்டாவில் சனிக்கிழமை இரவு மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இடிந்து விழுந்த கட்டிடத்தில் உணவு விடுதி செயல்பட்டு வந்துள்ளது. இரவு உணவு விடுதிக்கு வந்த வாடிக்கையாளர்கள் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 8 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் வரை கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மொத்தம் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற உறுதியான எண்ணிக்கை விவரம் தெரியவில்லை.
ராஜஸ்தான் மாநில கல்வித்துறை அமைச்சர், கட்டிடம் இடிந்து விழுந்த இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். இடிந்து விழுந்த கட்டிடம் அருகே ஒரு கட்டடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக விரிசல் ஏற்பட்டு மூன்று மாடி வணிக கட்டிடம் இடிந்து விழுந்து இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
கட்டிடம் மிக பழமையான கட்டிடம் என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறினர். கட்டிடம் இடிந்து விழும் போது வெடி சத்தம் போல பயங்கரமாக கேட்டதாக உள்ளூர் வாசிகள் கூறினர். போலீசாருடன் இணைந்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடிந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்டிடம் பழமையானதா? அதற்கு நோட்டீஸ் எதுவும் விடுக்கப்பட்டு இருந்ததா? என்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.












Click it and Unblock the Notifications