"7 மேஜர் ரயில்வே திட்டங்கள்!" ஒப்புதல் தந்த மத்திய அரசு.. ஆனால் தமிழகத்திற்கு பெரிய ஏமாற்றம்
டெல்லி: ரயில்வே துறையின் ஏழு மல்டி-டிராக்கிங் திட்டங்களுக்குப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், இதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகப் புகார்களும் எழுந்துள்ளன.
உலகிலேயே மிகவும் நீண்ட ஒரு ரயில்வே நெட்ஒர்க்கை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இருப்பினும், நமது ரயில்வே துறை இன்னும் பழைய காலத்திலேயே இருப்பதாகவும் நவீனக் காலத்திற்கு ஏற்றபடி மாறவில்லை என்றும் புகார் இருந்து கொண்டே இருக்கிறது.

இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் தொடங்கிப் பல அதிநவீன ரயில்களும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மேஜர் திட்டங்கள்: இதற்கிடையே இப்போது மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழு ரயில்வே துறையில் ஏழு மல்டி-டிராக்கிங் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னாவ் தெரிவித்தார். இதன் ஒட்டுமொத்த மிதிப்பு சுமார் ₹ 32,500 கோடியாகும்.. இவை அனைத்தும் முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்படும்.. தற்போதுள்ள பாதையின் திறனை அதிகரிக்கவும், ரயில் இயக்கங்களைச் சீராக்கவும், நெரிசலைக் குறைக்கவும் இந்த மெகா திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் 9 மாநிலங்களில் இருக்கும் 35 மாவட்டங்களில் நடக்கும். உத்திர பிரதேசம், பீகார், தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் இதன் மூலம் பலன் பெறும். இதன் மூலம் இந்திய ரயில்வேயின் நெட்வொர்க் 2,339 கிமீ வரை அதிகரிக்கும். மேலும், இந்தத் திட்டம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏன் முக்கியம்: கோரக்பூர்-கான்ட்-வால்மீகி நகர் இடையே தற்போதுள்ள வழித்தடத்தை இரண்டு வழித்தடமாக மாற்றுவது.. சோன் நகர்-ஆண்டாள் மல்டி டிராக்கிங் திட்டம், நெர்குண்டி-பரங் மற்றும் குர்தா சாலை- விஜயநகரம் இடையே மூன்றாவது பாதை அமைப்பது.. முட்கேட்-மேட்சல் மற்றும் மஹ்பூப்நகர்-தோன் இடையே, தற்போதுள்ள பாதை உடன் கூடுதல் பாதையை அமைப்பது உள்ளிட்ட மொத்தம் 7 திட்டங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
உணவு தானியங்கள், உரம், நிலக்கரி, சிமென்ட், சாம்பல், இரும்பு மற்றும் எஃகு, கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் அத்தியாவசிய பாதைகளாக இவை இருக்கிறது. இந்தத் திட்டங்கள் மூலம் சரக்கு ரயில் சேவை மேலும் எளிமையாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் திட்டங்கள் அனைத்தும் முடிவடைந்தால் ஆண்டுக்கு 200 மில்லியன் டன்கள் அளவுக்குக் கூடுதலாகச் சரக்கை எடுத்துச் செல்ல முடியும்.

இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுற்றுச்சுழலுக்குப் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாத.. குறைந்த ஆற்றலை எடுத்துக் கொள்ளும் ஒரு போக்குவரத்து முறையாக ரயில்வே இருக்கிறது. இது காலநிலை மாற்றத்தைத் தடுக்கவும் சரக்கை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல ஆகும் செலவையும் குறைக்கும் விதமாக அமைய உள்ளது.
ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் தடையற்ற இணைப்பை வழங்கும் பிரதமரின் கதி சக்தி தேசிய மாஸ்டர் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகிறது.. இது சரக்கு ரயிலுக்கு மட்டுமின்றி பயணிகளுக்கும் உதவும். இதன் மூலம் இந்த ரூட்களில் பயணிக்கும் பயணிகள் ரயிலின் பயண நேரம் கணிசமாகக் குறையும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் ஏமாற்றம்: இந்தத் திட்டத்தின் மூலம் 9 மாநிலங்களில் இருக்கும் 35 மாவட்டங்கள் பலன் பெறுகிறது. இருப்பினும், இந்த 7இல் எந்தவொரு திட்டமும் தமிழகத்திற்கு இல்லை. தமிழ்நாட்டில் பல இடங்களில் ரயில் சேவையை மேம்படுத்துவது குறித்துப் பல ஆண்டுகளாகக் கோரிக்கை இருக்கும் போதிலும், இந்த திட்டத்திலும் அது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை. இதனால் மக்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications