சுற்றிலும் தீ.. இந்தியா மட்டும் இல்லைனா எங்க கதை முடிஞ்சு இருக்கும்.. நெகிழ்ந்து போன கப்பல் கேப்டன்
டெல்லி: நடுக்கடலில் இந்தியப் பணியாளர்களுடன் பற்றி எரிந்த வணிக கப்பலுக்குச் சரியான நேரத்தில் இந்தியக் கப்பல் உதவிய நிலையில், அதற்கு அக்கப்பலின் கேப்டன் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலமாகவே மத்திய கிழக்குப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அங்கு ஏடன் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் வரும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது.

அப்படி தான் கடந்த சனிக்கிழமை அங்கு வந்த கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடந்தது. தாக்குதலுக்கு உள்ளான அந்த வணிகக் கப்பல் எஸ்ஓஎஸ் அழைப்பைப் பிறப்பித்த நிலையில், உடனடியாக இந்தியா கடற்படை அங்கே உதவிக்குச் சென்றுள்ளது.
வணிக கப்பல்: அந்த வணிக கப்பலில் 22 இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்துள்ளனர். நடுக்கடலில் அந்த கப்பல் எரிந்து கொண்டிருந்த நிலையில், இந்தியக் கப்பல் உதவியுள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த மார்லின் லாண்டா மீது ஏவுகணை தாக்குதல் நடந்த நிலையில், இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உதவிக்குச் சென்றுள்ளது.

இதற்கிடையே தக்க நேரத்தில் உதவிய இந்தியக் கடற்படைக்கு அந்த வணிகக் கப்பலின் கேப்டன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்த வணிக கப்பலின் கேப்டன் அபிலாஷ் ராவத், "இந்தியக் கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்திற்கு நான் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
உதவிய இந்தியக் கப்பல்: தீ கட்டுக்கடங்காமல் எரியத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் தீயை எதிர்த்துப் போராடும் நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். சரியான நேரத்தில் தீயை அணைக்க வந்த இந்திய கடற்படைக்கு வாழ்த்துக்கள். இந்தியக் கடற்படை மட்டுமே எங்களுக்கு உதவ முன்வந்தது" என்றார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து இந்திய கடற்படையும் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது.

10 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு சுமார் 6 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியக் கடற்படை "மார்லின் லாண்டா கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சுமார் ஆறு மணி நேரம் போராடி எங்கள் டீம் வெற்றிகரமாகத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. எங்கள் டீம் தற்போது நிலைமையைக் கண்காணித்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
என்ன நடக்கிறது: இந்த மார்லின் லாண்டா கப்பல் பிரிட்டன் நாட்டிற்குச் சொந்தமானதாகும். ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி படை அனுப்பிய பாலிஸ்டிக் ஏவுகணையால் இந்த கப்பல் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் ஆரம்பித்தது முதலே செங்கடலில் வரும் வணிகக் கப்பல்களைக் குறிவைத்து இந்த ஹவுதி படை தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஜனவரி 18ஆம் தேதி இதே ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பல் ட்ரோன்களால் தாக்கப்பட்ட இந்தியக் குழுவினரைக் கொண்டிருந்த மற்றொரு வணிகக் கப்பலுக்கு உதவி இருந்தது.. கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இந்தியாவின் மேற்கு கடற்கரையில் 21 இந்தியர்களுடன் வந்த லைபீரிய நாட்டுக் கப்பலுக்கு இந்தியா உதவியது.. மத்திய தரைக்கடல் பகுதியில் இதுபோன்ற சம்பங்கள் தொடரும் நிலையில், இது அந்த பகுதியில் நடக்கும் கடல் வணிகத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.












Click it and Unblock the Notifications