யுபிஐ போதும்! ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி நடைமுறைக்கு வந்தது..எவ்வளவு எடுக்கலாம்? எப்படி எடுப்பது
டெல்லி: யுபிஐ பயன்பாடு அதிகரித்து விட்ட நிலையில், தற்போது ஏடிஎம்-களிலும் யுபிஐ மூலமாக பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்து விட்டது. இதில் யுபிஐ மூலமாக ஏடிஎம்மில் எப்படி பணம் எடுப்பது, எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
மக்கள் மத்தியில் தற்போது டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்வது அதிகரித்து வருகிறது. ரொக்க பரிவர்த்தனைகளே காலப்போக்கில் மறைந்து போய்விடக்கூடும் என்று சொல்லும் அளவிற்கு தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை பெருகிவிட்டது. பெட்டிக்கடை முதல் பெரிய ஹைப்பர் மார்க்கெட் வரை அனைத்தும் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்கின்றன.
இந்த டிஜிட்டல் பணப்புழக்கத்தை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியதற்கு யுபிஐ வசதி முக்கிய காரணம் என்று சொன்னால் மிகையாது. ஏனெனில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வந்து டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதை விட யுபிஐ செயலி மூலமாக பரிவர்த்தனை மக்களுக்கு மிகவும் எளிதாக உள்ளது.

யுபிஐ மூலமாக ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி: எனவே, பலரும் யுபிஐ முறையை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்வதையே விரும்புகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் யுபிஐ செயலி வைத்திருக்காமல் இருக்கும் ஸ்மார்ட் போன் யூசர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்வது முதல் யாருக்கேனும் பணம் அனுப்ப வேண்டும் என்பது முதல் அனைத்தும் யுபிஐ மூலமே தற்போது பெரும்பாலும் நடக்கிறது.
யுபிஐ மூலம் சில வினாடிகளிலேயே பணத்தை அனுப்ப முடிகிறது. நெட் பேங்கிங்குடன் ஒப்பிடும் போது யுபிஐ மூலமாக பணம் அனுப்புவது மிகவும் எளிதான ஒன்றாகவே பார்க்க முடிகிறது. மக்கள் யுனிபைட் பேமண்ட்ஸ் இன்டர்பேஸ் சிஸ்டம் எனப்படும் இந்த யுபிஐ பயன்பாடு அதிகரித்து விட்ட நிலையில், ஏடிஎம் களிலும் யுபிஐ மூலமாக பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த ஆண்டே இது தொடர்பான அறிவிப்பு வெளியாகினாலும் பரவலாக நடைமுறைக்கு வந்ததாக தெரியவில்லை. இந்த நிலையில், பேங்க் ஆப் பரோடா வங்கி முதல் முறையாக யுபிஐ மூலமாக தங்களது வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்த வசதியை பயனடுத்தி ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் பணம் எடுக்கலாம்.
பணம் எப்படி எடுப்பது?: ஒருநாளைக்கு இரண்டு முறை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். அதன்படி பார்த்தால் ஒருநாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை யுபிஐ பயன்படுத்தியே எடுத்துக்கொள்ள முடியும். பேங்க் ஆஃப் பரோடோ வங்கி வாடிக்கையளர் மட்டும் இல்லை.. எந்த வங்கியில் கணக்கு வைத்து இருந்தாலும் பணம் எடுத்துக்கொள்ள முடியும். BHIM UPI, Bob World UPI அல்லது வேறு எந்த யுபிஐ செயலி இருந்தாலும் அதன் மூலம் ஏடிஎம் மூலமாக எடுத்துக்கொள்ள முடியும்.
இது தொடர்பாக பேங்க் ஆஃப் பரோடா கூறுகையில், " நாட்டின் இந்த வசதியை அறிமுகம் செய்து இருக்கும் முதல் பொதுத்துறை வங்கி இதுதான். பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர் மட்டும் இன்றி எந்த வங்கி வாடிக்கையாளரும் அதாவது யுபிஐ செயலி பயன்படுத்துபவர்களும் இந்த வசதியை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேங்க் ஆப் பரோடா ஏடிஎம்மில், யுபிஐ கேஷ் Withdrawal ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பிறகு தேவைப்படும் தொகையை (5 ஆயிரத்திற்கு மிகாமல்) பதிவிட வேண்டும். ஏடிஎம் ஸ்கிரீனில் ஒரு கியூ ஆர் கோட் தோன்றும். அதை உங்கள் யுபிஐ ( enabled for ICCW) செயலி மூலமாக ஸ்கேன் செய்ய வேண்டும். தற்போது யுபிஐ ரகசிய எண்ணை மொபைலில் டைப் செய்ய வேண்டும். அதன்பிறகு ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியும்.












Click it and Unblock the Notifications