மஹுவா மொய்த்ராவுக்கு மீண்டும் சிக்கல்.. புதிய கிரிமினல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..என்ன நடந்தது?
டெல்லி: திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது புதிய கிரிமினல் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா அளித்த புகாரின் பெயரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் லோக்சபாவில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக குற்றாச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக எம்.பி பதவியில் இருந்தும் மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. இதனிடையே அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட மஹுவா மொய்த்ரா வெற்றி பெற்றார். இந்நிலையில்தான் உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரசில் போலே பாபா நடத்திய ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில், 121 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. இந்த இடத்தில், தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா ஆய்வு செய்தார். அப்போது, அவருக்கு குடை பிடித்தபடி ஒருவர் நின்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இதை விமர்சித்து மஹுவா மொய்த்ரா பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் போட்டு இருந்தார்.
அவரது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதை டெலிட் செய்தார். எனினும், அந்த பதிவு தொடர்பாக சமூக வலைதள நிறுவனத்திடம் இருந்து காவல் துறை விவரங்கள் கோரியது. அதேபோல மகளிர் ஆணைய தலைவி, விளக்கம் கேட்டு மஹுவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மேலும் மகளிர் ஆணைய தலைவி அளித்த புகாரின் அடிப்படையில், மஹூவா மொய்த்ரா மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதிய கிரிமினல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் கண்ணியத்திற்கு இழிவுபடுத்தும் விதமாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மஹுவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications