பிரிட்டனுடன் மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவை... இந்தியாவில் அதிகரிக்கும் உருமாறிய கொரோனா
டெல்லி: இந்தியாவில் பிரிட்டன் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 90ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டன் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் புதிய உருமாறிய கொரோனா வகையை உறுதி செய்தனர்.
இந்த உருமாறிய கொரோனா அதிக ஆபத்தானது இல்லை என்றாலும்கூட மற்ற வகைகளைவிட 70% வரை வேகமாகப் பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

விமான போக்குவரத்து
இதையடுத்து பிரிட்டன் உடனான விமானப் போக்குவரத்திற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் டிசம்பர் மாதம் பிற்பகுதியில் தடை விதித்திருந்தது. இந்தியா விதித்திருந்த போக்குவரத்து தடை கடந்த ஜனவரி 8ஆம் தேதி வரை அமலில் இருந்தது. உருமாறிய கொரோனா தொடர்ந்து பிரிட்டனில் பரவி வரும் சூழலில், பிரிட்டன் உடனான விமான சேவை நேற்று மீண்டும் தொடங்கியது. இதன் காரணமாக நாட்டில் உருமாறிய கொரோனா பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் உருமாறிய கொரோனா
இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்முதல் இந்த உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. ஜனவரி 6ஆம் தேதி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி 73 பேருக்கு இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று விமானச் சேவை மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் நாடு முழுவதும் 13 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு
இதுதவிர கடந்த 24 மணி நேரத்தில் 18,222 பேருக்கு வழக்கமான கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே நான்கு லட்சத்து 31 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதேபோல நேற்று மட்டும் 228 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டனில் மோசமாகும் நிலை
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கொரோனா பரவல் மிகவும் மோசமாக உள்ளது. அந்நகரில் வசிக்கும் 30 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதன் காரணமாக லண்டன் நகரில் 'மேஜர் இன்சிடென்ட்' எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாகக் குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்காக இந்தியா வரவிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவரது பயணத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் நாட்டில் இவ்வளவு மோசமான சூழ்நிலை நிலவும்போது, அந்நாட்டுடனான விமானச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது, உருமாறிய கொரோனா பரவலை நாட்டில் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications