காவிரி நீர் பங்கீடு.. இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை! கர்நாடகாவின் திட்டம் என்ன? வெளியான பரபர தகவல்
டெல்லி: காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் கர்நாடகா அரசு வகுத்துள்ள முக்கிய வியூகம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் 15 நாட்கள் தினமும் 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனை நிறைவேற்ற உச்சநீதிமன்றமும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து வருகிறது.

தமிழகத்துக்கு காவிரியில் கடந்த 13ம் தேதி முதல் 15 நாட்கள் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இன்று தான் கடைசி நாளாகும்.
இத்தகைய சூழலில் தான் காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. கர்நாடகாவில் பந்த் போராட்டங்கள் நடந்து வருகிறது. அதேபோல் இன்றைய தினம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டமும் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் இந்த வழக்கு விசாரணை என்பது அதிக முக்கியத்துவம் பெற உள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின்போது கர்நாடகா அரசு தரப்பில் முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளதாகவும், அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது தமிழகத்துக்கு கர்நாடகாவில் வறட்சி உள்ளது. போதிய மழை இல்லாததால் கர்நாடகா அணைகளில் நீர்மட்டம் என்பது குறைந்துள்ளது. இன்னும் 9 மாதங்களுக்கு கர்நாடகா மாநில மக்களின் குடிநீர் தேவைக்கான தண்ணீருக்கே பற்றாக்குறை உள்ளது. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுமட்டுமின்றி கர்நாடகா அணைகளில் உள்ள நீர்மட்டத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு சார்பில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட உள்ளது. அதோடு தற்போது கர்நாடகா அணைகளில் உள்ள நீர்மட்டம், கர்நாடகாவில் குடிநீர், விவசாயம் உள்ளிட்டவைக்கு தேவையான தண்ணீர், தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் குறித்த விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளனர்.












Click it and Unblock the Notifications