கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 3,000 கன அடிநீர்- காவிரி ஒழுங்காற்று குழு மீண்டும் பரிந்துரை!
டெல்லி: காவிரியில் தமிழ்நாட்டுக்கு மேலும் 3,000 கன அடிநீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு அக்டோபர்
16-ந் தேதி முதல் அக்டோபர் 30-ந் தேதி வரை 3,000 கன அடிநீரை திறக்க வேண்டும் என்பது ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை என்பது தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீரைத் திறக்க வேண்டும் என்பது. இதனை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 3,000-க்கும் குறைவான அளவு நீர் திறதுவிடப்பட்டது. இதற்கு எதிராக மண்டியா, மைசூர் உள்ளிட்ட இடங்களில் கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் கேஆர்ஸ், கபினி அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்தது.

இதன்பின்னர் கர்நாடகா நேற்று முதல் திடீரென சுமார் 8,000 கன அடிநீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் அக்டோபர் 12-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. தற்போது முன்கூட்டியே கூட்டப்பட்டுள்ளது.

காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கான உரிய நீரை கர்நாடகா திறந்துவிட மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டுக்கு அக்டோபர் 16-ந் தேதி முதல் அக்டோபர் 30-ந் தேதி வரை வினாடிக்கு 3,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடி, தமிழ்நாட்டுக்கு 3,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிடும்.












Click it and Unblock the Notifications