கோடி கோடியாய் சம்பாதிக்கலாம்..ஆப் மூலம் ஆப்பு வைத்த HPZ! எல்லாமே ஃப்ராடாம்..சாட்டையை சுழற்றிய சிபிஐ!
டெல்லி: இந்தியா முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திடீர் சோதனை நடத்தியது. HPZ டோக்கன் ஆப் என்ற அப்ளிகேஷன் மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீட்டு மோசடி தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில வருடங்களாகவே ஆன்லைன் மோசடிகள் விதவிதமாக அரங்கேறி வருகிறது. தற்போது கேமிங் செயலிகள் தடைக்கு பின்னர் மீண்டு வந்திருக்கும் நிலையில் முதலீடு தொடர்பான மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக டிரேடிங், கிரிப்டோ கரன்சி முதலீடு செய்ய வைத்து முதலில் சிறித சிறிதாக தொகைகளை கொடுத்து அவர்களின் ஆசையை தோண்டி பின்னர் கோடிக்கணக்கில் பணத்தை திருடும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது.
சிபிஐ: இந்நலையில் மொபைல் செயலிகள் மூலமாக மோசடிகள் அதிகமாக வருவதாக மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐக்கு) புகார் வந்தது. இதை அடுத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடைபெற்றிருக்கிறது. HPZ என்ற டோக்கன் செயலி மூலம் Shigoo Technology Private Limited மற்றும் Lillian Technocab Private Limited என்ற இரண்டு நிறுவனங்களும் மோசடியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் இயக்குனர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளது.
10 மாநிலங்களில் சோதனை: டெல்லி, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலும் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. அதில் மொபைல் போன்கள், கம்ப்யூட்டர் ஹார்டு டிரைவ்கள், சிம் கார்டுகள், ஏடிஎம்/டெபிட் கார்டுகள், மின்னஞ்சல் கணக்குகள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டு ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
கிரிப்டோ கரன்சி: இந்த இரண்டு நிறுவனங்களும் கிரிப்டோ கரன்சி முதலீடு திட்டத்தை முன்வைத்து பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த அப்ளிகேஷனில் பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி பெரிய அளவில் பணமோசடி நடைபெற்றுள்ளது. குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட டோக்கன் எண்ணை வழங்குவார்கள் அதனை வைத்து பெரிய அளவில் சம்பாதிக்கலாம் எனக் கூறி முதலில் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளனர்.
ஏமாற்றம்: அவர்களுக்கு சிறு சிறு தொகைகளை வங்கி கணக்குகளில் செலுத்தியதால் இதில் அதிக பயனர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இதை அடுத்து அவர்களிடம் பெரிய அளவில் பணத்தை பெற்றதும் பிட்காயின் விலை குறைந்து விட்டது எனக் கூறி அவர்களை ஏமாற்றி உள்ளனர். இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடைய சுமார் 150 வங்கி கணக்குகளில், முதலீட்டாளர்களிடம் இருந்து நிதியை வசூலித்து பயன்படுத்தப்பட்டது தெரிய வந்திருக்கிறது.
ஹவாலா-கிரிப்டோ கரன்சி: அதுமட்டுமல்லாமல் சட்ட விரோதமாக இந்தியாவிற்கு வெளியே இந்த பணம் மாற்றப்பட்டிருக்கிறது. ஹவாலா மூலமும் கிரிப்டோ கரன்சி மூலமும் இந்த நிதியானது வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதை அடுத்து இந்த வழக்கில் புகார்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக ஆதாரங்களை சேகரிப்பதற்கு தற்போது சோதனை நடைபெற்று வருவதாகவும் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications