சிபிஐக்குள் நடக்கும் பெரிய யுத்தம்.. எதுவும் செய்ய முடியாத நிலையில் மோடி.. என்ன நடக்கிறது?
சிபிஐ அமைப்பிற்குள் நடக்கும் யுத்தம் தற்போது இந்தியாவையே உலுக்கி இருக்கிறது.
Recommended Video

டெல்லி: சிபிஐ அமைப்பிற்குள் நடக்கும் யுத்தம் தற்போது இந்தியாவையே உலுக்கி இருக்கிறது.
இந்தியாவில் முதல்முறையாக சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்தி இருக்கிறது. சிபிஐ சிறப்பு இயக்குனருக்கு எதிராக சிபிஐ இயக்குனர் முதல் தகவல் அறிக்கை அளிக்கிறார்.
சிபிஐ அமைப்பை எதிர்த்து சிபிஐ சிறப்பு இயக்குனர் வழக்கு தொடுகிறார். இது எல்லாம் என்ன, என்னதான் சிபிஐ அமைப்பில் நடக்கிறது என்று புரியாமல் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய விளக்கம் ஒன்றை அளிக்க வேண்டி இருக்கிறது. இந்த சிபிஐ புயல் மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்று.

யார் இந்த ராகேஷ் அஸ்தானா
இந்த வழக்கை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் தற்போதைய சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா குறித்து தெரிந்து கொள்ளவேண்டும். ராகேஷ் அஸ்தானா, குஜராத்தை சேர்ந்தவர். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை இவர்தான் விசாரணை செய்தது. மோடியின் குட் புக்கில் இருக்கும் இந்தியாவின் டாப் அதிகாரி இவர்தான். அதனால்தான் என்னவோ 2017ல் இவர் சிபிஐக்கு நேரடியாக மாற்றப்பட்டதோடு, சிபிஐயின் சிறப்பு இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.

யார் இந்த அலோக் வெர்மா
தற்போது சிபிஐ இயக்குனராக இருக்கும் அலோக் வெர்மா, டெல்லி கமிஷ்னராக இருந்தவர். இவர் கொஞ்சம் காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்று , இந்த சிபிஐ யுத்தத்திற்கு பின் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. இவருக்கும், அஸ்தானாவிற்கும் முதல் நாளில் இருந்து பிரச்சனை இருக்கிறது. அஸ்தானாவின் நியமனத்தை எதிர்த்த முதல் நபர் இவர்தான்.

என்ன நடந்தது
குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனங்களில் அப்போது வருமான வரித்துறை சோதனை செய்தது. அப்போது இறைச்சி ஏற்றுமதி வியாபாரம் செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் அலுவலகம் மற்றும் வீட்டில் கடந்த 2014ல் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் குரேஷி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்தது அம்பலம் ஆனது.

என்ன மோசடி
கருப்பு பணங்களை வெள்ளை பணமாக லாண்டரி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பின் சில சிபிஐ அதிகாரிகள், சில மத்திய அரசு அதிகாரிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து இதை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையில் இந்த விசாரணை குழு அமைக்கப்பட்டது.

ஆனால் நடந்தது என்ன
இந்த நிலையில் இந்த வழக்கில் சதீஷ் சனா உள்ளிட்ட பல தொழிலதிபர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பெரிய நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாருமே கைது செய்யப்படவில்லை. பல தொழிலதிபர்களிடம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கி அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது .

குற்றம் என்ன செய்தார்
இந்த நிலையில் சதீஷ் தற்போது அப்ரூவர் ஆகியுள்ளார். இவரிடம் ராகேஷ் அஸ்தானா 3 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் பலரிடம் இவர் லஞ்சம் வாங்கினார் என்றும் புகார் எழுந்துள்ளது. இதற்கான ஆவணங்கள், ஆதாரங்களை சிபிஐ கைப்பற்றி இருக்கிறது.

வழக்கு பதிவு
இந்த நிலையில்தான் அஸ்தானாவிற்கு எதிராக சிபிஐ அமைப்பு வழக்கு பதவி செய்து, எஃப்ஐஆர் தாக்கல் செய்துள்ளது. அதேபோல் தேவேந்தர் குமார் என்ற நபரையும் கைது செய்து இருக்கிறது. இவர் சிபிஐயின் சீனியர் ஆபிசர்களில் ஒருவர். இன்னும் பல முக்கியமான நபர்களை இந்த லஞ்ச வழக்கில் சிபிஐ கைது செய்துள்ளது.

ரெய்டு நடத்தினார்கள்
இது எல்லாமும் போக நேற்று மாலை சிபிஐ தலைமையகத்திலேயே சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இந்திய வரலாற்றில் முதல்முறை இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. இதில் அஸ்தானா அறையும் சோதனை செய்யப்பட்டது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

மோடி உள்ளே வந்தார்
இதில் மோடி இதுவரை நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்க காரணம், அவருக்கும் அஸ்தானாவிற்கும் இருக்கும் நட்புதான். அஸ்தானா மோடிக்கு பல முக்கியமான நேரங்களில் உதவியது அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அஸ்தானா மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் மோடி இருக்கிறார் என்று புகார் எழுந்துள்ளது.

இன்னொரு பார்வை
இதில் அஸ்தானா சிபிஐ இயக்குனர் வெர்மா மீது இன்னொரு குற்றச்சாட்டு வைக்கிறார். அதன்படி வெர்மா ரயில்வே கேட்டரிங் முறைகேட்டில் லாலுவிற்கு ஆதரவாக செயல்பட்டார், அதேபோல் ஐஎன்எக்ஸ் வழக்கில் ப. சிதம்பரத்திற்கு ஆதரவாக செயல்பட்டார் என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தான் அதை கண்டுபிடித்த காரணத்தால் தன் மீது நடவடிக்கை எடுக்கிறார் என்று வேறு ஒரு கோணத்தை முன்வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications