இந்த ஆண்டு சிபிஎஸ்இ 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைப்பு
டெல்லி: இந்த கல்வியாண்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 30 சதவீதம் வரை பாடங்கள் குறைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.
ஜூன் 1ம்தேதி திறக்கப்பட்டிருக்க வேண்டிய பள்ளிகள் ஜூலை 31 வரை திறக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இம்மாத இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது.
திமுகவின் சோ கால்ட் ஏ.டி.எம்.களுக்கு டெல்லியின் அதிரடி லாக்டவுன்.. கிலியில் கல்வி தந்தைகள்!
இயல்பு நிலை திரும்பினால்
ஆகஸ்ட் மாதமும் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பினால் தான் பள்ளிகள் திறப்பு பற்றி அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது. இந்த சூழலில் வரும் கல்வியாண்டில் 9 முதல் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 30 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அசாதாரண நிலை
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில். "நாட்டிலும் உலகிலும் நிலவும் அசாதாரண சூழ்நிலையைப் பார்க்கும்போது, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை திருத்தி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களின் சுமையை குறைக்க அறிவுறுத்தப்பட்டது.
கல்வியாளர்கள் பரிந்துரை
அரசின் இந்த முடிவுக்கு உதவுவதற்காக, சில வாரங்களுக்கு முன்பு நான் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்து அனைத்து கல்வியாளர்களிடமிருந்தும் பரிந்துரைகளை அனுப்புமாறு அழைத்தேன், இதற்காக 1500 பரிந்துரைகளை நாங்கள் பெற்றுள்ளதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பரிந்துரை அளித்த அனைவருக்கும் நன்றி.
கற்றல் திறன்
கற்றல் திறனின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, முக்கியமானவற்றை மட்டும் உள்ளடக்கிய பாடத்திட்டங்களை உருவாக்கவும், பாடத்திட்டத்தில் 30 சதவீதம் வரை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டரில் கூறியுள்ளார்.