E-vouchers மூலம் தனியார் மையங்களில் இலவசமாக தடுப்பூசி.. மத்திய அரசு அறிவிப்பு... எப்படி பயன்படும்?
டெல்லி: இந்தியாவில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்கள் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள உதவும் வகையில் மத்திய அரசு இ-வவுச்சர் முறையை அறிமுகம் செய்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. சுமார் 63 நாட்களுக்குப் பிறகு, நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 86,498 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 2,123 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இ-வவுச்சர் அறிமுகம்
கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்த நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. நாட்டில் கொரோனா தடுப்பூசி பணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களில் மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்கள் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள உதவும் வகையில் மத்திய அரசு இ-வவுச்சர் முறையை அறிமுகம் செய்துள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில், "நாட்டில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்க இ-வவுச்சர் முறை அறிமுகப்படுத்தப்படும். இந்த வவுச்சர்களை மக்கள் தனியார் தடுப்பூசி மையங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இது பொருளாதார ரீதியாகப் பலவீனமான பிரிவினர் தனியார் மையங்களில் தடுப்பூசி போடுவதற்கு உதவும்" என கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் ஜூன் 21 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தேவைப்படும்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படிப் பயன்படுத்த வேண்டும்
பொருளாதார ரீதியாக மேம்பட்ட நிலையில் இருக்கும் மக்கள் ஏழை மக்கள் தடுப்பூசி போடுவதற்கு உதவும் வகையில் இந்த இ-வவுச்சர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த இ-வவுச்சர்கள் குறித்துக் கூடுதல் தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை.. இருப்பினும், இந்த வவுச்சர்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து தடுப்பூசி மையத்தில் ஸ்கேன் செய்து கொள்ளும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் மையங்கள்
இந்தியாவில் 18+ அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், பணம் செலுத்தும் ஆற்றல் கொண்டவர்கள் தனியார் மையங்களில் பணம் கொடுத்து தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் சர்வீஸ் சார்ஜாக ரூ 150 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி உரை
முன்னதாக, நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். நாட்டிலுள்ள அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என்றும் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து அதை மாநிலங்களுக்குப் பிரித்து அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மூன்று தடுப்பூசிகள் ஆய்வுப் பணிகளில் உள்ளதாகவும் அவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications