டெல்லி அதிகாரம்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் அவசர சட்டம்.. மத்திய அரசு அதிரடி
டெல்லி: ஆம் ஆத்மி அரசுக்கும், டெல்லி துணை நிலை ஆளுநருக்கும் இடையே நிலவும் மோதலுக்கு மத்தியில், தலைநகரில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது.
'ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது; துணைநிலை ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை' என்றும் உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு சாதகமாக அண்மையில் தீர்ப்பு அளித்தது.
இது தொடர்பாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில், தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்திற்கு ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழுமையான அதிகாரம் உள்ளதாகவும், அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும்' என்றும் தீர்ப்பில் கூறியிருந்தது,

மேலும் அன்றாட நிர்வாகங்கள் அனைத்தையும் மேற்கொள்ள துணைநிலை ஆளுநரை விட முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே ஆளுநர் மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படி தான் செயல்பட வேண்டும். அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்' என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.
இந்நிலையில் தீர்ப்பு வெளியான சில மணி நேரத்திலேயே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை உருவாக்கினார். டெல்லியில் சேவைகள் துறை செயலர் ஆஷிஷ் மோரை இடமாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். ஆனால் இதுவரை டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தீர்ப்பை மாற்ற "சதி" என்று குற்றம் சாட்டினார் . அதேநேரம் துணை நிலை ஆளுநர் வி கே சக்சேனா ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்குரிய விதிகள் மற்றும் நடைமுறைகளை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
சேவைகள் செயலர் ஆஷிஷ் மோர் இடமாற்றம் தொடர்பாக எழுந்துள்ள இந்த சர்ச்சைக்கு மத்தியில், கெஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை மாலை துணை நிலை ஆளுநரை தனித்தனியாக சந்தித்து விளக்கமும் அளித்தனர். சக்சேனாவுடனான சந்திப்பிற்குப் பிறகு பேசிய கெஜ்ரிவால், நிர்வாக மாற்றங்களைச் செய்ய சேவை செயலாளரின் மாற்றம் அவசியம் என்றார்.
இந்த சூழலில் ஆம் ஆத்மி அரசுக்கும், டெல்லி துணை நிலை ஆளுநருக்கும் இடையே நிலவும் மோதலுக்கு மத்தியில், தலைநகரில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் உடனடியாக கொண்டுவரப்பட்டுள்ளதால் உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மேல்முறையீடு செய்யும் என தெரிகிறது












Click it and Unblock the Notifications