மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் பல்துறை விசாரணை அமைப்பு கலைப்பு
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் நடந்த சதி திட்டம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட எம்டிஎம்ஏ எனப்படும் பல்துறை கண்காணிப்பு அமைப்பை (Multi Disciplinary Monitoring Agency) மத்திய அரசு கலைத்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு வருகை தந்தார். தனது தாயார் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பிரச்சார மேடைக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது தற்கொலை படை தாக்குதலில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரிக்க எம்.சி. ஜெயின் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்துறை கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என ஜெயின் கமிஷன் பரிந்துரை செய்திருந்தது.
இதன்படி சிபிஐ, சிபிசிஐடி உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள் இடம்பெற்ற பல்துறை கண்காணிப்பு அமைப்பு கடந்த 1998 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது. பிறகு இந்த அமைப்பின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
ராஜீவ் காந்தி கொலையில் சதி திட்டம் தொடர்பாக இலங்கை, பிரிட்டன், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தகவல் கேட்டு இந்த அமைப்பின் சார்பில் கடிதங்கள் எழுதப்பட்டன. அதில் பெரும்பாலும் பதில் கிடைத்துவிட்டது. ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டோர் வெறும் அம்புகள் என்றும் அதை எய்திய அம்புகளை எம்டிஎம்ஏ அமைப்பு கண்டுபிடிக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜீவ் கொலைக்கான சதி குறித்து சொல்லிக்கொள்ளும்படியாக எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த அமைப்பை கலைத்து மத்திய அரசு கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அமைப்பு நடத்தி வந்த விசாரணையை சிபிஐயின் ஒரு பிரிவே கவனிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications