"4+ 2.." காய் நகர்த்தும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்! மோடி அமைச்சரவையில் எத்தனை இலாகாக்கள்? பரபர
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 இலாகாக்கள் கிடைக்க இருக்கிறதாம். அதேபோல நிதிஷ் கட்சிக்கு கிடைக்கவுள்ள இலாகாக்கள் குறித்தும் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேநேரம் பாஜக 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இதையடுத்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கிறார். கடந்த இரண்டு தேர்தல்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில், என்டிஏ கூட்டணி ஆட்சி அமைவது இதுவே முதல்முறையாகும்.
தகவல்: இதில் என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு பிறகு அதிக இடங்களில் வென்ற சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் கிங்க மேக்கராக உருவெடுத்துள்ளனர். அவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் முக்கிய பங்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு எத்தனை இலாகாக்கள் கிடைக்கும்.. நிதிஷ்குமாருக்கு எத்தனை இலாகாக்கள் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
4+ 2 கிடைக்குமா: அதாவது மோடி 3.o அமைச்சரவையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 இலாகாக்கள் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நிதிஷ்குமாரின் ஜேடியுவுக்கு 2 இடங்கள் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ராம் மோகன் நாயுடு, ஹரிஷ் பாலயோகி மற்றும் டக்குமல்ல பிரசாத் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல நிதிஷ் தரப்பில் ஜேடியு கட்சியின் மூத்த தலைவர்களான லாலன் சிங் மற்றும் ராம்நாத் தாக்கூர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் எனத் தெரிகிறது.
நாளை பதவியேற்பு: என்டிஏ கூட்டணி குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மாலை பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பதவியேற்கும் நிலையில், அப்போது இவர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் இவர்களுக்கு எந்த துறைகள் ஒதுக்கப்படும்.. கேபினட் அமைச்சர் பதவியா இல்லை இணை அமைச்சர் பதவியா என்பது போன்ற தகவல்களும் நாளை தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் கடந்த இரண்டு முறையும் பாஜக தனிப்பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இந்த முறை அவர்களால் பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை வெல்ல முடியவில்லை. பாஜக 240 இடங்களை மட்டுமே பெற்றது. இதனால் எனடிஏ கூட்டணியில் 16 சீட்களில் வென்ற சந்திரபாபு நாயுடு, 12 சீட்களில் வென்ற நிதிஷ் குமார் கிங் மேக்கராக உருவெடுத்தனர்.
லோக்சபா தேர்தல்: லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பான்மை கிடைக்காத சூழலில் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் இந்தியா கூட்டணிக்கு வரலாம் எனச் சொல்லப்பட்டது. காங்கிரஸ் சார்பில் இரு தலைவர்களிடையே பேச்சுவார்த்தையும் நடந்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், இரு தலைவர்களும் என்டிஏ கூட்டணியில் தொடர்வோம் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். இந்த இரு கட்சித் தலைவர்களும் ஆதரவு கடிதம் அளித்த பிறகே பிரதமர் மோடி 3ஆவது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரியது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி நாளை மாலை 7.15 மணிக்கு நாட்டின் பிரதமராக 3ஆவது முறையாகப் பதவியேற்கிறார். அவருடன் ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications