20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது?- 18 பேரும் மீண்டும் போட்டியிடலாமா? தேர்தல் ஆணையர் பரபர தகவல்
Recommended Video

டெல்லி: 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால் ஜனவரிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தகவல் தெரிவித்தார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் தனபால் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது.
அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் மற்றொரு நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். தகுதி நீக்கம் செல்லும் என்று இந்திரா பானர்ஜியும், செல்லாது என்று சுந்தரும் தீர்ப்பு கூறி இருந்தனர். இதையடுத்து இந்த வழக்கு 3-ஆவது நீதிபதி சத்தியநாராயணாவிடம் சென்றது. அவரும் இந்திரா பானர்ஜியின் தீர்ப்பையே கூறினார். மேலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடையையும் அவர் நீக்கிவிட்டார்.

20 தொகுதிகள்
இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகள், எம்எல்ஏக்கள் காலமாகியதால் காலியாக உள்ள 2 தொகுதிகள் என 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது எப்போது என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார்.

காத்திருப்போம்
அவர் கூறுகையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. அதை பார்த்தோம். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் உள்ளது. அதுவரை நாங்கள் காத்து இருப்போம்.

கடிதம்
30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றால், உடனடியாக இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்குவோம். 18 தொகுதிகளும் ஓர் ஆண்டுக்கும் மேலாக காலியாக இருப்பதை சுட்டிக்காட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எங்களுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

ஜனவரிக்குள் இடைத்தேர்தல்
ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 2 தொகுதிகளுக்கும் வருகிற ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படாவிட்டால், இந்த 2 தொகுதிகளுடன் சேர்த்து மொத்தம் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கும் ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது.

தடை இல்லை
18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அவர்கள் தங்கள் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. போட்டியிடக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications