எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு "கிரீமி" லேயர்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் சொன்ன முக்கியமான விஷயம்
டெல்லி: நமது நாட்டில் இப்போது ஓபிசி பிரிவினருக்கு கிரீமி லேயர் நடைமுறையில் இருக்கிறது. இந்த கிரீமி லேயர் நடைமுறையை எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் கொண்டு வர வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் கூறியுள்ள சில கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இடஒதுக்கீடு தொடர்பாக டி.ஒய். சந்திரசூட் தலைமை நீதிபதியாக இருந்தபோது ஒரு முக்கிய வழக்கை அரசியலமைப்பு அமர்வு விசாரித்தது. அப்போது இடஒதுக்கீடு நோக்கத்திற்காகப் பட்டியலினத்தில் துணைப்பிரிவுகளை உருவாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று 2005ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்த அமர்வு கடந்த ஆண்டு ரத்து செய்தது.

உச்ச நீதிமன்றம்
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரின் துணைப் பிரிவுகளை மாநில அரசுகள் உருவாக்கலாம் என்ற தீர்ப்பில் 6 நீதிபதிகள் இதற்கு ஆதரவாகவும் ஒரு நீதிபதி இதற்கு எதிராகவும் தீர்ப்பளித்திருந்தனர். இந்த அமர்வில் நீதிபதி பி.ஆர். கவாய் இடம் பெற்றிருந்தார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
கோவா உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி கவாய், "கிரீமி லேயர் தீர்ப்புக்காக எனது சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நான் பரவலாக விமர்சிக்கப்பட்டேன்.. ஆனால், நான் மக்களின் விருப்பப்படி அல்லாமல், சட்டம் மற்றும் எனது மனசாட்சிக்கு ஏற்ப தீர்ப்பளிக்க வேண்டும் என்பதை நான் எப்போதும் நம்பினேன்" என்றார்.
கிரீமி லேயர்
மேலும், பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கு 'கிரீமி லேயர்' கொள்கையை அமல்படுத்துவது குறித்து கவாய் மேலும் கூறுகையில், "முதல் தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் இட ஒதுக்கீட்டின் மூலம் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி, பின்னர் அவரது மகன் அதே இட ஒதுக்கீட்டின் மூலம் ஐ.ஏ.எஸ் ஆகிறார். அதைத் தொடர்ந்து, மூன்றாவது தலைமுறையும் அதே பிரிவில் ஐ.ஏ.எஸ் ஆவதைப் பார்த்துள்ளேன்.
ஒப்பிட முடியாது
மும்பை அல்லது டெல்லியில் உள்ள சிறந்த பள்ளிகளில் படிக்கும் ஒரு தலைமைச் செயலாளரின் மகனை, கிராமப்புற அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு கொத்தனார் அல்லது விவசாயத் தொழிலாளியின் குழந்தையுடன் ஒப்பிட முடியுமா என்று நான் என்னைக் கேட்டுக்கொண்டேன். இதுவே என் மனதை உலுக்கிய முக்கிய காரணம்" என்று குறிப்பிட்டார். கடந்தாண்டு துணைப் பிரிவுகளை உருவாக்குவது தொடர்பான விவகாரத்தில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடி பிரிவுகளிலும் 'கிரீமி லேயர்' முறையைக் கண்டறிய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புல்டோசர் நடவடிக்கைகள்
புல்டோசர் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்த தீர்ப்பு குறித்துப் பேசிய தலைமை நீதிபதி கவாய், "அரசு நிர்வாகம் நீதிபதியாக மாறுவதை இதன் மூலம் தடை செய்தோம்.. நிர்வாகம் நீதிபதியாக மாற அனுமதிக்கப்பட்டால், அது அதிகாரப் பிரிப்பு என்ற கருத்தையே பாதிக்கும்.. இந்தத் தீர்ப்பு அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராகக் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வழிவகுத்தது" என்றார்.
மேலும், நீதிபதிகளும் மனிதர்கள் தான் என்பதால், அவர்கள் எப்போதும் பிழைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றும் குறிப்பிட்டார். தனது முந்தைய சில தீர்ப்புகள் பிழையானவை என்பதைத் தானே ஒப்புக்கொண்டிருப்பதாகவும் கவாய் குறிப்பிட்டார். மேலும், நீதித்துறை சுதந்திரத்தில் உயர் நீதிமன்றங்கள் எந்த விதத்திலும் உச்ச நீதிமன்றத்திற்குக் குறைந்தவை அல்ல என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications