வீகன் உணவுக்கு மாறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.. காரணம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சுவாரசிய தகவல்
டெல்லி: அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டு காய்கறி, பழங்கள் என தாவர உணவு வகைகளையே சாப்பிடும் வீகன் உணவு முறைக்கு தான் மாறிவிட்டதாகவும், இதற்கு தனது மகள்களே காரணம் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தலைமை நீதிபதி இந்த சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் உள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், அசைவ பொருட்கள் எதுவுமே இல்லாமல் தாவர உணவு வகைகளை மட்டுமே சாப்பிடும் வீகன் உணவு முறைக்கு மாறிவிட்டதாக கூறினார்.

தனது இந்த முடிவுக்கு மகள்களே காரணம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி டி ஒய் சந்திரசூட் கூறியிருக்கிறார். தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் கூறியதாவது: -எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே மாற்றுத்திறனாளிகள்தான். எந்த ஒரு விஷயத்தையும் நான் செய்வதற்கு எனது மகள்களே எனக்கு தூண்டுகோலாக இருக்கிறார்கள். சமீபத்தில் நான் வீகன் உணவு முறைக்கு மாறினேன்.
இதற்கு காரணம்.. எந்த உயிரினத்திற்கும் தீங்கு இல்லாத வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும் எண்று கூறினர். இதனால், பால், தேன் போன்ற உணவுகளையும் தொடாமல் முழுமையான வீகன் உணவு முறைக்கு மாறினேன். இருந்த போதிலும் எனது மகள்கள் என்னிடம் சொன்ன விஷயம்.. இது மட்டும் போதாது, எதையும் கொடுமைப்படுத்தி தயாரிக்கும் செய்யப்படும் பொருட்களையும் நாம் பயன்படுத்தக் கூடாது என்பதை உறுதி செய்ய வேன்டும் என்றனர்.
எனவே நான், சில்க் மற்றும் லெதரால் செய்யப்பட்ட எந்த பொருட்களையும் நான் வாங்குவது இல்லை. எனது மனைவியும் பட்டு பொருட்களால் செய்யப்படும் எந்த பொருளையும் வாங்குவது இல்லை. அதேபோல லெதர் பொருட்களால் செய்யப்பட்ட பொருட்களையும் வாங்குவது இல்லை. எங்களிடம் இருக்கும் பொருட்களை நாங்கள் தூக்கி வீசவில்லை. ஆனால் குறைந்தபட்சம் முதல் கட்ட நடவடிக்கையாக இந்த வீகன் வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தலைநகர் டெல்லியில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் சாகர் ரத்னா உணவு விடுதி திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இவ்வாறு கூறினார். தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட்டிற்கு பிரியங்கா மற்றும் மகி என்ற இரு மகள்கள் உள்ளனர். அலகாபாத் தலைமை நீதிபதியாக இருந்த போது இரண்டு மகள்களையும் அவர் தத்தெடுத்துக்கொண்டார்.
முன்னதாக கடந்த ஆண்டு தனது இரு மகள்களையும் தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருந்தார். முதல் முறையாக தனது மகள்களை அழைத்துக்கொண்டு தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் நீதிமன்ற வளாகத்தை மகள்களுக்கு சுற்றிக்காட்டினார். பின்னர் நீதிமன்றத்தின் அறை எண் 1-ஐ மகள்களுக்கு காட்டிய தலைமை நீதிபதி நீதிமன்றம் செயல்பாடுகள் குறித்து எடுத்து விளக்கினார்.
நீதிபதிகள் இருக்கும் சேம்பர், வழக்கறிஞர்கள் வாதங்கள் முன்வைக்கும் இடம் உள்ளிட்டவற்றையும் தனது இரு மகள்களுக்கும் தெளிவாக தலைமை நீதிபதி எடுத்துக் கூறினார். பிறகு தனது சேம்பருக்கு மகள்களை அழைத்துச் சென்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தனது அலுவலகத்தையும் சுற்றிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications