கிழக்கு லடாக்கின் புதிய பகுதிகளிலும் சீனா ராணுவத்தை குவிக்கிறது.. அம்பலப்படுத்திய சாட்டிலைட் படங்கள்
டெல்லி: கிழக்கு லடாக்கின் சில புதிய பகுதிகளில், சீனாவால் ராணுவ குவிப்பு செய்யப்படுகிறது. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ) தவுலத் பேக் ஓல்டி (டி.பி.ஓ) மற்றும் டெப்சாங் செக்டாரில் ராணுவ குவிப்பை அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் புதிதாக, சீனத் தளத்திற்கு அருகில் முகாம்களும் வாகனங்களும் காணப்படுவதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதி செய்கின்றன. இந்த தளங்கள் 2016க்கு முன்னர் சீனாவால் கட்டப்பட்டவை, ஆனால் புதிய முகாம்கள் மற்றும் வாகனங்களுக்கான வழித் தடங்கள் இங்கு புதிதாக உருவாக்கப்படுகின்றன என்று செயற்கைக்கோள் படங்களில் அம்பலமாகியுள்ளது.

தரை கண்காணிப்பு மூலமும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெப்சாங்கில் சீனா ராணுவ குவிப்பில் ஈடுபட முடியும் என்பதை மே மாத இறுதியில் இந்தியா உணர்ந்தது. பின்னர் இப்பகுதியில் தனது இருப்பை இந்தியா உறுதிப்படுத்தியது. 2013ல் சீன ராணுவம் ஊடுருவிய பகுதி டெப்சாங் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 6 ம் தேதி மோல்டோ பகுதியில் இந்தியா-சீனா ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது, அங்கு இரு தரப்பினரும் படை குறைப்பு குறித்து ஆலோசித்தனர். ஆனால், ஜூன் 15 ஆம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்பைச் சேர்ந்த துருப்புக்களுக்கு இடையே வன்முறை மோதல் ஏற்பட்டது. இதன் விளைவாக 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications