லடாக் எல்லையில் பதற்றம்.. ஏவுகணை, ராக்கெட், டிரோன்களை குவிக்கும் சீனா.. இந்தியாவின் பதில் என்ன??
'டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், எல்லையில் சீனா புதிய நெடுஞ்சாலைகளை அமைத்து வருவதாகவும் ஏவுகணை மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை குவித்து வருவதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. அதிலும் கல்வான் தாக்குதலுக்குப் பின்னர் நிலைமை மேலும் மோசமானது.
எல்லைப் பகுதிகளில் இரு தரப்பும் அதிகளவிலான ராணுவ வீரர்களைக் குவித்து வருகின்றன. காஷ்மீர் மட்டுமின்றி அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பிற எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது,

நெடுஞ்சாலைகள்
இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையே இன்னும் கூட மோதல் ஹாட்ஸ்பாட்டாக இருப்பது காஷ்மீர் தான். இந்நிலையில், காஷ்மீர் எல்லைப் பகுதியில் சீனா உட்கட்டமைப்பை மேம்படுத்தச் சீன அதிகளவில் முதலீடு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லடாக் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் நெடுஞ்சாலை ஒன்றைச் சீன ராணுவம் அமைத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது இரு நாட்டிற்கும் இடையே இருக்கும் பதற்றத்தை அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

மிக எளிதாக அடையமுடியும்
இது குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "கிழக்கு லடாக் செக்டருக்கு எதிரே உள்ள அக்சாய் சின் பகுதியில் சீன ராணுவம் புதிய நெடுஞ்சாலைகளை அமைக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் அவர்களால் மிக எளிதாக எல்லைப் பகுதியை அடைய முடியும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சீன ராணுவம் எல்லைப் பகுதியை அடையக் கூடிய நேரும் குறைந்துள்ளது" என்றார்.

விமான ஓடுதளங்கள்
இந்தியா சீன எல்லை அருகே காஷ்கர், கர் குன்சா மற்றும் ஹோட்டன் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே சீன ராணுவத்திற்கு ராணுவ தளங்கள் உள்ளன. இந்தச் சூழலில் தான் எல்லையில் அமைந்துள்ள நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவது மற்றும் புதிய விமான ஓடுதளங்களை அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் சீன ஈடுபட்டுள்ளது.

ராக்கெட் ரெஜிமென்ட்கள்
அதேபோல திபெத் தன்னாட்சி பிராந்தியத்திலும் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் ரெஜிமென்ட்களை சீன ராணுவம் அதிகளவில் குவிக்கத் தொடங்கியுள்ளன. அதேபோல ராணுவத்தினர் தங்க ஏதுவாக மறைந்திருக்கும் மறைவான இடங்களில் குடியிருப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் டிரோன்களின் கண்காணிப்பையும் சீனா அதிகப்படுத்தியுள்ளது.

திபெத் பகுதி
திபெத்தியர்களை தங்கள் ராணுவத்தில் சேர்க்கும் பணிகளையும் சீனா வேகப்படுத்தியுள்ளதாக ராணுவ உயர் அதிகாரி தெரிவித்தார். திபெத் எல்லைப் பகுதி சவாலான நிலப்பரப்பைக் கொண்டது என்பதால் திபெத்தியர்களைச் சீனா தனது ராணுவத்தில் அதிகளவில் சேர்க்கத் தொடங்கியுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

தயார்நிலை
கடந்த ஆண்டு குளிர் காலத்தில் இருந்ததை காட்டிலும் இந்தாண்டு தங்குமிடம், சாலைகள் ஆகியவற்றின் சீனா மிகவும் சிறப்பாக தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது, எல்லையில் சீனா ராணுவத்தைக் குவித்து வருவது தொடர்பாக இந்தியா தனது கவலையைத் தெரிவித்ததிருந்தது குறிப்பிடத்தக்கது.

பென்டகன் அறிக்கை
அதேபோல அருணாச்சல பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் சீனா புதிய கிராமம் ஒன்றையே கட்டியுள்ளதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்திருந்தது. 100 குடும்பங்கள் வாழக் கூடிய வகையில் சீனா அங்குக் கிராமத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் அது கிராமம் இல்லை என்றும் ராணுவ முகாம் என்றும் கூட தகவல்கள் வெளியானது. இந்தச் சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா மற்றொரு கிராமத்தைக் கட்டியுள்ளதாகக் கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications