ஆசியாவின் கேம் சேஞ்சராக மாறும் சீனா.. F-35 விமானத்தை இந்தியா வாங்குவது வேஸ்ட்!
டெல்லி: அமெரிக்காவிடமிருந்து 5ம் தலைமுறை போர் விமானமான F-35ஐ இந்தியா வாங்க இருக்கிறது. ஆனால் சீனாவின் 6ம் தலைமுறை போர் விமானம் ஆசியாவின் கேம் சேஞ்சராக உருவெடுத்திருப்பதாகவும், எனவே இந்தியாவின் யோசனை காலம் தாழ்ந்தது என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
'The Diplomat' எனும் இதழலில் இது குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. சீனா எப்படி கேம் சேஞ்சராக மாறியிருக்கிறது? ஏன் அமெரிக்காவால் மாற முடியவில்லை என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது.

சீனாவின் அசுர வளர்ச்சி:
சீனா கடந்த டிச.26ம் தேதி J-36 மற்றும் J-XX என இரண்டு போர் விமானங்களை பரிசோதித்திருந்தது. 6ம் தலைமுறை போர் விமானங்கள் இவை இரண்டும். விமானங்களின் திறன்கள் அமெரிக்க மற்றும் ரஷ்ய தொழில்நுட்பங்களை விஞ்சி இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நாடு அமெரிக்காவை விட மேம்பட்ட விமான தொழில்நுட்பத்தை உருவாக்குவது இதுவே முதல் முறை.
ஒருமுறை எரிபொருளை நிரப்பினால் 2,500 கி.மீ வரை இந்த விமானங்களால் பறக்க முடியும். அதே நேரத்தில் தரையிறங்காமல், வானில் இருந்தவாரே இந்த விமானங்களுக்கு பெட்ரோல் போட முடியும். அப்படியெனில் டியாகோ கார்சியா மற்றும் அலாஸ்காவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை இந்த விமானங்களால் எளிதாக தாக்க முடியும்.
6ம் தலைமுறை விமானம்:
இதன் மற்றொரு சிறப்பம்சம் மின்சார தயாரிப்புதான். விமானத்திற்கு தேவையான மின்சாரத்தை, என்ஜினிலிருந்து வெளி வரும் வெப்பத்தை கொண்டே உருவாக்கும் திறன் J-36 மற்றும் J-XX விமானங்களில் இருக்கிறது. சுமார் 1 மெகவாட் வரை இந்த வகை விமானங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இவ்வளவு மின்சாரத்தை வைத்து வந்தே பாரத் ரயிலை 120 கி.மீ வரை இயக்க வைக்க முடியும். டெஸ்லா கார்களை 1000 முறை சார்ஜ் செய்யலாம்.
கேம் சேஞ்சர்:
அமெரிக்க விமனாங்களிலும் இந்த வசதி இருக்கிறது. ஆனால், அவை வெறும் 270 கிலோவாட் அளவுக்குதான் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. அதிக மின்சாரம் இருந்தால் எதிரி நாட்டு விமானங்களை சீக்கிரமாக அடையாளம் காண முடியும். அதேபோல, ஏவுகணை தாக்குதலை கண்டுபிடித்து அதிலிருந்து தப்பிக்க முடியும். சீன விமானங்கள் ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் பறக்கும். அதாவது, மணிக்கு 3,705 கி.மீ வேகத்தில் பறக்கும். இவையெல்லாம் சேர்ந்து, இந்த விமானங்களை ஆசியாவின் கேம் சேஞ்சராக மாற்றியிருக்கின்றன.
சரி இது எப்படி இந்தியாவின் F-35 கொள்முதல் யோசனையை தவறாக்கியது? என்று கேட்கிறீர்களா! சீனா 6ம் தலைமுறை விமானங்களை 2031க்குள் தனது படையில் சேர்த்துக்கொள்ளும். ஆனால் அமெரிக்கா 6ம் தலைமுறை விமானங்களை உற்பத்தி செய்ய குறைந்தது 12 ஆண்டுகளாவது ஆகும். அப்படி விமானங்களை உற்பத்தி செய்த உடனே நாம் அதை வாங்குகிறோம் என்று வைத்துக்கொண்டால் கூட.. 6 ஆண்டுகளுக்கு சீனாவின் அச்சுறுத்தலை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
இந்தியாவுக்கு சிக்கல்:
6ம் தலைமுறை விமானங்கள் வந்துவிட்டால், எதற்கு நமக்கு F-35? எனவே டிரம்ப் கொடுத்த ஆஃபரை நாம் ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனம் கிடையாது. அதை விட்டுவிட்டு சொந்த நாட்டில் 6ம் தலைமுறை விமானத்தை தயாரிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
சீனாவின் அதிநவீன விமானம் குறித்தும், இந்தியாவின் F-35 வாங்கும் யோசனை குறித்தும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே?












Click it and Unblock the Notifications