டெல்லி ஜி20 உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ஜி ஜின்பிங்! ரஷ்யாவை தொடர்ந்து சீன அதிபரும் ஆப்சென்ட்
டெல்லி: ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு டெல்லியில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் முதன் முறையாக ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இது தவிர சிறப்பு அழைப்பாளர்களாக வங்கதேசம், எகிப்து, மொரிசியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட புதின், இந்த மாநாட்டில் தான் கலந்துக்கொள்ளவில்லை என்பதை தெளிவுபடுத்தியிருந்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் ஜி20 நாடுகளின் பட்டியலில் உள்ள மேற்கு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனுக்கு உதவிகளை செய்து வருகிறது. இந்த சூழலில்தான் புதின் இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தார். இந்நிலையில் இதனைத் தொடர்ந்து சீன அதிபரும் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி ஜின்பிங்குக்கு பதில் இந்தியாவுக்கான சீன தூதர் மற்றும் ஜி 20 நாடுகளுக்கான சீனாவின் அதிகாரி ஒருவர் என இரண்டு பேர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதல் சம்பங்கள் இந்தியா சீனா இடையே வலுவான எல்லை பிரச்னைகளை உருவாக்கியுள்ளது. இந்த பிரச்னையையடுத்து இரு தரப்பிலும் தொடர் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல சமீபத்தில் சீனா வெளியிட்டிருந்த 'மேப்' ஒன்றும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதாவது இந்த வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளை சீனா தனது பகுதிகளாக குறித்திருக்கிறது.

இந்த பகுதியில் உள்ள கிராமங்களில் ஏற்கெனவே சீனா தரப்பினர் சில கட்டுமானங்களை மேற்கொண்டிருந்தனர். இதற்கு இந்தியா கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தது. தற்போது இதனைத் தொடர்ந்து வரைபடத்திலும் அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளை சேர்த்திருந்தது இந்த சர்ச்சையை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. எல்லை பிரச்னையில் அமெரிக்கா இந்தியாவுக்குதான் தற்போது வரை சப்போர்ட் செய்து வருகிறது.
இந்த ஜி 20 மாநாட்டில் இது குறித்து ஜோ பைடன் சீன அதிபரிடம் பேச வாய்ப்பிருக்கிறது. தங்கள் பிரச்னையில் அமெரிக்கா போன்ற நாடுகள் மூக்கை நுழைப்பதை சீனா ஒருபோதும் விரும்பவில்லை. எனவே சீன அதிபர் இந்த மாநட்டை தவிர்த்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல இந்த ஜி20 லிஸ்ட்டில் மிகப்பெரிய நாடாக சீனாவும், ரஷ்யாவும், அமெரிக்காவும் இருக்கிறது. இப்படி இருக்கையில் முதல் இரண்டு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு ஆப்சென்ட் ஆகியிருப்பது இந்தியாவுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications