பாஜக எம்பி கங்கனா ரனாவத்தை கன்னத்தில் ஓங்கி அறைந்த பெண் காவலர் கைது
டெல்லி: இமாச்சல பிரதேசத்தில் தேர்வான பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகை கங்கனா ரணாவத், இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். அங்கு கங்கனா ரனாவத் சுமார் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எம்பியாகி உள்ளார். இமாச்சல பிரதேசத்தில் இருந்து டெல்லி செல்வதற்காக கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சி.ஐ.எஸ்.எப்) பெண் காவலர் குல்வீந்தர் கவுர், கங்கனாவை நோக்கி வேகமாக சென்றுள்ளார். பின்னர் அந்த பெண் காவலர் கங்கனாவின் கன்னத்தில் 'பளார்' என ஓங்கி அறைந்தார். இதனை சற்றும் எதிர்பாராத கங்கனா அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார்.

இதை கண்ட அவரது உதவியாளர்கள் மற்றும் விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் ஓடி வந்து அந்த பெண் காவலரை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் சண்டிகர் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின்னர் கங்கனா விமானம் ஏறி டெல்லி புறப்பட்டு சென்றார். பின்னர் விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து கங்கனா சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் கங்கனா ரணாவத், "இப்போது நான் நன்றாக இருக்கிறேன். சண்டிகர் ஏர்போர்டில் நடைபெற்ற பாதுகாப்பு சோதனையில் அப்படி நடந்தது. நான் ஏர்போர்டில் பயணிகளுக்கான சோதனை முடிந்த பின், செல்லும்போது பெண் காவலர் வேறு ஒரு கேபினில் அமர்ந்திருந்தார். நான் அவரைக் கடந்து செல்ல முயன்ற போது, திடீரென சி.ஐ.எஸ்.எப் பெண் காவலர் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பின்பு என்னை ஆபாசமாக திட்டினார். ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டபோது, விவசாயிகளின் போராட்டத்துக்காக இப்படி செய்தேன் என்று என்னிடம் தெரிவித்தார். பஞ்சாபில் பயங்கரவாதம் அதிகரித்து வருவதும், இதை எப்படி கையாள்வது என்பதும் தான் எனக்கு பெரும் கவலை அளிக்கிறது" என்று கூறினார்.
இந்த நிலையில் சண்டிகர் விமான ஏர்போர்டில் கங்கனா ரணாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் தொடர்பான வீடியோ காட்சிகள் வேகமாக பரவியது. இதற்கிடையே கங்கனாவை அறைந்த பெண் காவலர் குல்வீந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் நேற்று முன்தினம் விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையே கங்கனாவை அறைந்தது ஏன் என பெண் காவலர் குல்வீந்தர் கவுர் விளக்கம் அளித்தார், அதில் அவர் "ரூ.100 அல்லது ரூ.200 கொடுக்கப்பட்டதால் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக கங்கனா கூறியிருக்கிறார்.. டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் என் அம்மாவும் ஒருவர். விவசாயிகளை இழிவுபடுத்தும் ரனாவத் வந்து அந்த போராட்டத்தை முன்னின்று நடத்துவாரா" என்றார்.
இதையடுத்து பஞ்சாப் அமைப்புகள் பெண் காவலருக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளன. பெண் காவலர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் கடும் போராட்டத்தை முன்னெடுக்க அங்குள்ள விவசாய அமைப்புகள் தயாராகி வருகின்றன. பஞ்சாப் முழுவதும் பெண் காவலர் குறித்தே பேச்சாக உள்ளது. இந்த சூழலில் பெண் காவலர் குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குல்விந்தர் கவுருக்கு எதிராக ஐபிசி பிரிவுகள் 323 மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு புறம் எனில், சிஐஎஸ்எஃப் டிஐஜி வினய் கஜ்லா நேற்று சண்டிகர் சென்று விசாரணை நடத்தினார்












Click it and Unblock the Notifications