என் பேச்சை கேட்கலைல்ல.. பிறகு ஏன் என்னை கொண்டாடறீங்க.. பிரதமரின் அழைப்பை நிராகரித்த சிறுமி!
மத்திய அரசின் கவுரவத்தை 8 வயது லிசிபிரியா நிராகரித்துள்ளார்
டெல்லி: "டியர் மோடி.. பலமுறை யோசிச்சுதான் இந்த முடிவை எடுத்தேன்.. உங்கள் பெருமை எனக்கு தேவையில்லை.. மகளிர் தின பிரசாரத்தில் தன்னை கவுரவிக்க வேண்டாம்" என்று 8 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு நெத்தியடி பதில் ஒன்றை தெரிவித்துள்ளார்.
மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினத்தில், மகளிரின் பெருமைகளை பறைசாற்றவும், அவர்களை கொண்டாடவும் பிரதமர் மோடி ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதியன்று தனது சமூக வலைத்தள கணக்குகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், அந்த ஒரு நாள் மட்டும் அவர்கள் அதனை நிர்வகிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும்' என்பதுதான் அந்த அறிவிப்பு... இதற்காக #SheInspiresUs என்ற ஹேஷ்டேக்கும் உருவாக்கப்பட்டுள்ளது.

உந்துதல்
இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சிறந்த பெண் ஆளுமைகளை குறிப்பிட்டு பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்... MyGovIndia என்ற பெயரில் அரசாங்கத்தால் இந்த ட்விட்டர் பக்கம் கையாளப்பட்டு வருகிறது.. உந்துதலாக திகழ்ந்த இந்திய பெண்கள் பலரை குறிப்பிட்டு தொடர்ந்து பதிவிட்டும் வருகின்றனர். அந்த வகையில், லிசிபிரியா கங்குஜம் என்பவரின் பெயரும் பதிவிடப்பட்டிருக்கிறது.. இவரை ஊக்கப்படுத்தும் பெண்களில் ஒருவராக மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

லிசிபிரியா
லிசிபிரியா போல உங்களில் யாரேனும் இருந்தால் எங்களுக்கு சொல்லுங்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதற்கு முன்னதாக, யார் இந்த லிசிபிரியா? எதற்காக இவரை மத்திய அரசு தேர்வு செய்ய வேண்டும் என்ற காரணத்தை பார்ப்போம்.. 8 வயது சிறுமிதான் லிசிபிரியா.. மணிப்பூரைச் சேர்ந்தவர்.. இளம் காலநிலை ஆர்வலரும்கூட.. மிக சிறிய வயது சுற்றுச்சூழல் ஆர்வலர்... உலக சிறார் அமைதிப் பரிசு, இந்தியா அமைதிப் பரிசு, அப்துல் கலாம் சிறார் விருது பல விருதுகளை பெற்றவர்.. ஏராளமான அங்கீகாரங்களுக்கு சொந்தக்காரர்.. இந்த சின்ன வயதிலேயே சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடி வருகிறார்.

போராட்டம்
2018-ம் வருடம் ஜூலை 4-ம் தேதி மங்கோலியாவில் நடந்த ஐநாவின் நிகழ்ச்சி ஒன்றில், உலக தலைவர்களின் முன்னிலையில் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான தன்னுடைய குரலை முதன்முதலாக உயர்த்தினார். 2019-ம் ஆண்டு முதல் இந்திய நாடாளுமன்ற வாயிலில் தன் கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து ஒரு வாரம் போராட்டம் நடத்திய போராளியும் இவர்.. லிசிபிரியாவின் சிறப்பை ஒரே வரிகளில் சொல்ல வேண்டுமானால், தான் இந்த பூமியில் வாழ்ந்த மொத்த 3040 நாட்களில் இதுவரை 51,000 மரங்களை நட்டுள்ளார்.

குட்டி விஞ்ஞானி
அது மட்டுமல்ல லிசிபிரியா ஒரு குட்டி விஞ்ஞானி என்று கூட சொல்லலாம்.. வீட்டில் வளர்க்கத்தக்க சிறிய செடியில் இருந்து பிராணவாயுவை எடுத்து கொள்ளும் வகையிலான சுகிஃபு என்ற காற்று சுத்திகரிப்பு கருவியையும் கண்டறிந்துள்ளார். இவரைதான் மத்திய அரசு அந்த ட்விட்டரில் குறிப்பிட்டு, "இவரை போன்ற ஒருவரை உங்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்" என்று கூறப்பட்டிருந்தது.

நிராகரிக்கிறேன்
இதற்கு லிசிபிரியா ஒரு பதிலடி தந்துள்ளார்.. அதுவும் டியர் மோடி என்று குறிப்பிட்டே தன் பதிலை தொடங்குகிறார்... "டியர் மோடி, நீங்கள் என் குரலை கேட்க போவதில்லை என்றால் தயவுசெய்து என்னை நீங்கள் கொண்டாட வேண்டாம். உங்கள் #SheInspiresUs முன்முயற்சியின் கீழ் நாட்டின் ஊக்கமளிக்கும் பெண்களில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி... ஆனால் இதை நான் நிராகரிக்கிறேன்.. பலமுறை யோசித்த பிறகே, இந்த மரியாதையை நிராகரிக்க முடிவு செய்தேன்" என்று துணிச்சலாக குறிப்பிட்டுள்ளார் லிசிபிரியா.

விமர்சனங்கள்
உண்மையிலேயே லிசிபிரியாவின் இந்த கேள்வி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.. ஒருசாரார் இது கவுரவப்படுத்தியதை களங்கப்படுத்தும் பதிலடி என்கிறார்கள்.. ஆனால் பலரும் அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.. மொத்தத்தில் லிசிபிரியாவின் இந்த ட்வீட் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.












Click it and Unblock the Notifications