2 நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்த்த மத்திய அரசு எதிர்ப்பு.. கொலிஜியம் விடாப்பிடி!
உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ் மற்றும் ஏ.எஸ் போபண்ணா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்த கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
டெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ் மற்றும் ஏ.எஸ் போபண்ணா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்த கொலிஜியம் மீண்டும் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கனவே மறுத்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிந்துரை செய்துள்ளது.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் சேர்த்து 27 நீதிபதிகள் இருக்கிறார்கள். மொத்தமாக 31 நீதிபதிகள் இருக்க வேண்டும். இதனால் உச்ச நீதிமன்றத்திற்கு புதிதாக 4 நீதிபதிகள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
இதற்கான பட்டியலை கொலிஜியம்தான் எப்போதும் பரிந்துரை செய்யும். அதை மத்திய அரசு ஏற்கும். கொலிஜியம் அனுப்பிய நீதிபதிகள் பட்டியலை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் வழக்கம். ஆனால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அனுப்பிய பட்டியலை இந்த முறை மத்திய அரசு ஏற்கவில்லை.
மொத்தம் கொலிஜியம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், ஏ.எஸ் போபண்ணா, பிஆர் காவாய், சூர்யா காந்த் ஆகிய 4 பேரின் பெயரை பரிந்துரைக்கு அனுப்பியது. இதில் பம்பாய் ஹைகோர்ட் நீதிபதி பிஆர் காவாய் மற்றும் ஹிமாச்சல் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் ஆகியோரின் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டது.
ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், ஏ.எஸ் போபண்ணா ஆகியோரின் பரிந்துரையை அரசு ஏற்கவில்லை. இதில் அனிருதா போஸ் ஜார்க்கண்ட் ஹைகோர்ட் தலைமை நீதிபதி ஆவார். அதேபோல் ஏ.எஸ் போபண்ணா கவுகாத்தி ஹைகோர்ட் தலைமை நீதிபதி ஆவார்.
இவர்களின் வயதை காரணம் காட்டி, மத்திய அரசு இவர்களின் பரிந்துரையை மறுத்துள்ளது. அனிருதா போஸ் அகில இந்திய அளவில் ஹைகோர்ட் நீதிபதிகள் வயதில், 12 வது இடத்தில் இருக்கிறார். அதேபோல் போபண்ணா வயது அடிப்படையில் 36வது இடத்தில் உள்ளார். இதை காரணம் காட்டி மத்திய அரசு இவர்களை நிராகரித்தது.
ஆனால், நீதிபதிகள் அனிருதா போஸ் மற்றும் ஏ.எஸ் போபண்ணா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்த கொலிஜியம் மீண்டும் பரிந்துரை செய்துள்ளது. நீதிபதிகளின் அனுபவம் மற்றும் அவர்கள் இருக்கும் நீதிமன்றத்தை காரணம் காட்டி இந்த முறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எல்லா மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளும் உச்ச நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் பதவி உயர்த்தப்படுவதாக கொலிஜியம் விளக்கம் அளித்துள்ளது. கொலிஜியம் இரண்டாவது முறை இப்படி பரிந்துரை அளித்துள்ளதால், இவர்களின் பெயர்களை மத்திய அரசு ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்த மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் கடைசியில் கொலிஜியத்தின் கட்டாயத்தின் பெயரில் நீதிபதி ஜோசப் உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றார்.