36 நிலைகளை குறிவைத்து 400 டிரோன்களை ஏவியது பாகிஸ்தான்.. அனைத்தையும் அழித்தோம்! இந்திய ராணுவம் பரபர!
டெல்லி: "இந்திய ராணுவத்தின் தாக்குதலைச் சமாளிப்பதற்கு ஏர்பஸ் 320 ரக பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தியது பாகிஸ்தான். இந்திய வான்வெளியில் பயணிகள் விமானங்கள் எதுவும் பறக்கவில்லை. அதேசமயம், பாகிஸ்தான் வான்வெளியில் பயணிகள் விமானங்கள் பறக்க அனுமதிக்கப்பட்டிருந்தன." என கர்னல் சோபியா குரேஷி இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றி வருகின்றனர்.

முன்னதாக, ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்தது.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்க மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா முறியடித்து வருவதோடு, பாகிஸ்தானிற்குள் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டது. இந்நிலையில், தற்போதைய நிலை குறித்து விவரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.
செய்தியாளர் சந்திப்பில், கர்னல் சோபியா குரேஷி கூறுகையில், "மே 7 மற்றும் 8 ஆம் தேதி இரவு, பாகிஸ்தான் ராணுவம், ராணுவ உள்கட்டமைப்பை குறிவைக்கும் நோக்கில், மேற்கு எல்லை முழுவதும் இந்திய வான்வெளியை பல முறை அத்துமீறி தாக்கியது. இது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் ராணுவம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் கனரக ஆயுதங்களையும் ஏவியது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியாவின் 26 ராணுவ நிலைகள் மீது நேற்று பாகிஸ்தான், துருக்கியின் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்தியா வழிமறித்து அவற்றை அழித்தது.
36 இடங்களில் ஊடுருவ முயற்சிப்பதற்காக சுமார் 300 முதல் 400 ட்ரோன்களை பயன்படுத்தியது பாகிஸ்தான் ராணுவம். இந்திய ஆயுதப்படைகள் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி இந்த ட்ரோன்களில் பலவற்றை சுட்டு வீழ்த்தின. இத்தகைய பெரிய அளவிலான வான்வழி ஊடுருவல்களின் நோக்கம் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்குச் சவால் விடுவது தான். ட்ரோன் அட்டாக் குறித்து தடயவியல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பகட்ட விசாரணையில் அவை துருக்கி தயாரிப்பான அசிஸ்கார்டு சோங்கர் ட்ரோன்கள் என்று தெரியவந்துள்ளன.
பயணிகள் விமானத்தை கேடயமாகப் பயன்படுத்தியது பாகிஸ்தான் ராணுவம். இந்திய ராணுவத்தின் தாக்குதலைச் சமாளிப்பதற்கு ஏர்பஸ் 320 ரக பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தியது பாகிஸ்தான். எல்லை கோட்டுக்கு அப்பால் இருந்து குண்டுகளை வீசியது பாகிஸ்தான். இந்திய வான்வெளியில் பயணிகள் விமானங்கள் எதுவும் பறக்கவில்லை. அதேசமயம், பாகிஸ்தான் வான்வெளியில் பயணிகள் விமானங்கள் பறக்க அனுமதிக்கப்பட்டிருந்தன.
இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தானுக்கு பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது. லே எல்லையில் தொடங்கி குஜராத்தின் சர் க்ரிங் எல்லை வரை டிரோன்களை செலுத்தி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான்" என கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications