பிஜேபிக்கு பிபி ஏற்றும் மபி.. கட்சி பெயர் நீக்கம்! மத்திய அமைச்சர் மீது சந்தேகம் கிளப்பும் காங்கிரஸ்
டெல்லி: காங்கிரஸிலிருந்து விலகி சென்று பாஜகவில் இணைந்த மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, ட்விட்டரில் கவர் படம், பயோ போன்றவற்றில் கட்சி பெயரை நீக்கிவிட்டதாக கூறி அவருக்கும் பாஜக தலைமைக்கும் மோதல் ஏற்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் சந்தேகம் கிளப்பி உள்ளனர்.
மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் ஜோதிர் ஆதித்யா சிந்தா. மத்திய பிரதேச மாநிலத்தின் சக்தி வாய்ந்த அரசியல் தலைவராக இருக்கும் இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றவுடன் முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.

ஆனால், காங்கிரஸ் தலைமை கமல்நாத்துக்கு முதலமைச்சர் வாய்ப்பை வழங்கியது. இதன் காரணமாக காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியதால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.
இதனை தொடர்ந்து மீண்டும் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது. சிவராஜ் சிங் சவுஹான் மீண்டும் மத்திய பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார். ஜோதிர் ஆதித்யா சிந்தியா மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இதற்கான தயாரிப்பு பணிகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன. இந்த நிலையில் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கும் பாஜக தலைமைக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்று கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே சிந்தியாவின் ட்விட்டர் பக்கத்தின் பயோவில் அவர் பாஜக என்ற வார்த்தையை நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் அவரது கவர் படத்தில் பாஜக, பிரதமர் மோடி தொடர்பான எந்த படங்களும் இல்லை. இதனையும் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியினர் விமர்சிக்கத் தொடங்கி உள்ளார்கள். அதே நேரம் நேற்று கூட பிரதமர் மோடி வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவை சிந்தியா ரீட்வீட் செய்து உள்ளார். ஆனாலும் காங்கிரஸ் கட்சியினர் பதிவுகளை நிறுத்தவில்லை.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள சிந்தியா, "மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சிக்கு எந்த பொது பிரச்சனையும் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் பொய்களை காலையிலும் மாலையிலும் பரப்பி வருகின்றனர். ஊழல் அரசாங்கம் 15 மாதங்கள் தாக்குப்பிடிக்கவில்லை." என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவையும் காங்கிரஸ் தலைவர் பவன் கேதா ரீட்வீட் செய்து கலாய்த்து இருக்கிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் சகோதரரும் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமாமன் லக்ஷ்மன் சிங், "நாங்கள் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை தேடுகிறோம். அவர் நல்ல பேச்சாளர். திறமையான அரசியல்வாதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை." என்று தெரிவித்து இருந்தார். இந்த ஆண்டில் தேர்தல் நெருங்க இருக்கும் நிலையில் சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்களை மீண்டும் காங்கிரஸ் தன் வசம் இழுக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications