விலையேற்றம் பற்றி பேசிய நிர்மலா சீதாராமன்.. லோக்சபாவில் வெளிநடப்பு செய்த காங்கிரஸ், திமுக எம்பிக்கள்
டெல்லி: விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
Recommended Video
கடந்த வாரம் தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக நாடாளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வந்தன.
“இலங்கை, பாகிஸ்தானைவிட இந்தியா பரவாயில்ல” ரகுராம் ராஜனே சொல்கிறார் - லோக்சபாவில் நிர்மலா சீதாராமன்
எதிர்க்கட்சிகள்
பண வீக்கம், பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன.
நிர்மலா சீதாராமன்
நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று மாலை 7 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் விலை உயர்வு குறித்து விளக்கமளித்தார்.
விலை உயர்வு
அப்போது பேசிய அவர், "மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் எடுத்து நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. பல உறுப்பினர்களின் பேச்சுக்கள் விலைவாசி உயர்வு குறித்த கவலையை வெளிப்படுத்தாமல், அரசியல் கோணத்தில் இருந்ததை கண்டேன். எனவே நானும் கொஞ்சம் அரசியல் ரீதியாகவே விளக்கமளிக்கிறேன்." என்று கூறினார்.
காங்கிரஸ், திமுக வெளிநடப்பு
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து பொருளாதாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்த நிர்மலா சீதாராமன், நாளை ராஜ்ஜிய சபாவில் விலை வாசி உயர்வு குறித்த தனது உரையை தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.