வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பூத் ஏஜென்ட்! தேர்தல் ஆணையத்திடம் போன காங்.,! கொல்கத்தாவில் சலசலப்பு
டெல்லி: மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பரத்பூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று வாக்குப்பதிவின் போது நடந்த விதிமீறல்கள் குறித்து காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
பரத்பூர் தொகுதியில் உள்ள 10 வாக்குச்சாவடிகளில் (எண்: 157, 158, 159, 160, 164, 165, 166, 167, 168 மற்றும் 169) காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது முகவர்களை மிரட்டி வெளியேற்றியதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மேற்கு வங்கத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் இன்று 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆனால், இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் வெடித்திருக்கின்றன.
குறிப்பாக குமார்கஞ்ச் தொகுதியின் பாஜக வேட்பாளர் சுவேந்து சர்கார், திரிணாமுல் தொண்டர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். அவரை போலீசார் பத்திரமாக மீட்டு கொண்டு வரும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
அதேபோல, தற்போது பரத்பூர் தொகுதியில் காங்கிரஸ் முகவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இப்படியாக தொடர்ந்து திரிணாமுல் கட்சி மீது புகார்கள் குவிந்துள்ளது.
ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் அதிகப்படியான பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். அதாவது, மாநில காவல்துறையின் எண்ணிக்கையை விட, பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மொத்தம் 2.4 லட்சம் (2,400 கம்பெனிகள்) மத்தியப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதாவது மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு 140 வாக்காளர்களுக்கும் ஒரு பாதுகாப்பு படை வீரர் என்ற விகிதத்தில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
இருந்தும் கூட வாக்குச்சாவடிகளில் இரு கட்சியினர் மோதல், பூத் கேப்சரிங் முயற்சி, வேட்பாளர் மீது தாக்குதல் என வன்முறை அதிகரித்திருக்கிறது. எனவே நிலைமையை உடனே கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளாக மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை கலைக்க பாஜக முயற்சிப்பதாக மம்தாவும், வன்முறை அரசியலை கையாளுவதாக பாஜகவும் மாறி மாறி விமர்சித்திருக்கின்றன.















Click it and Unblock the Notifications