பணமதிப்பிழப்பு நடந்து 5 வருடமாச்சே.. சொன்னது என்னாச்சு? மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி 5 கேள்விகள்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, மத்திய அரசுக்கு எதிராக ஐந்து கேள்விகளை முன் வைத்திருக்கிறார்.
2016ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.
தங்களிடம் உள்ள அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பது மோடியின் அறிவிப்பாக இருந்தது.

கால் கடுக்க காத்திருப்பு
இதை தொடர்ந்து பொதுமக்கள் கால்கடுக்க வங்கிகளுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், தீவிரவாத நடவடிக்கைகள் நடைபெறாது என்றும், எனவே இந்த சிரமங்களை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அப்போது கேட்டுக்கொண்டார் .

பொதுமக்கள் உயிரிழப்பு
இருப்பினும் பணத்துக்காக வங்கிகள் மற்றும் ஏடிஎம் வாசல்களில் மக்கள் காத்திருந்ததன் விளைவாக சுமார் 80க்கும் மேற்பட்ட முதியவர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. பணமதிப்பிழப்பு நடவடிக்கையொட்டி, மொத்தம் 4 பேர் உயிரிழந்ததாக, அரசு தரப்பில் ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது. மக்கள் படும் சிரமங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களை தொடர்ந்து கோவாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தனக்கு 50 நாட்கள் அவகாசம் தரும்படியும் , அதற்குள்ளாக இந்த பிரச்சினைகளை சரி செய்து விடுவேன் அல்லது நீங்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார் .

பொருளாதார பிரச்சினை
பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் கருப்பு பணம் ஒழிந்ததா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கிறது . பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்தது ரிசர்வ் வங்கி. ஆனால் பொருளாதார நடவடிக்கைகள்தான் பாதிப்படைந்தன. வளர்ந்து கொண்டிருந்த பொருளாதாரம் தேக்கம் அடைந்தது போன்ற குற்றச்சாட்டுக்கள் எதிர்க்கட்சிகளால், முன்வைக்கப்பட்டன. இதனால் தான் பிரியங்கா காந்தி இன்று மத்திய அரசுக்கு 5 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

5 கேள்விகள்
பணமதிப்பிழப்பு நடைபெற்றது வெற்றிகரமான நிகழ்வு என்றால் ஊழல்கள் முடிவுக்கு வந்து விட்டதா? கருப்பு பணம் மீண்டும் இல்லையா? பொருளாதாரம் ஏன் முழுக்க முழுக்க பணம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் மாறவில்லை? இன்னும் எதற்காக தீவிரவாத செயல்கள் அரங்கேறுகின்றன? விலைவாசி எதற்காக உயர்கிறது? இவ்வாறு பிரியங்கா காந்தி ஹிந்தி மொழியில் ட்விட்டர் பதிவில் கேள்வி கணைகளை தொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications