வெளிநாடு கிளம்பிய ராகுல் காந்தி.. தனிப்பட்ட பயணம் என தகவல்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளார். வரும் 17-ம் தேதி நாடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மே மாத தொடக்கத்தில், காங்கிஸ் கட்சி கடும் நெருக்கடியில் இருந்தபோது, ராகுல் காந்தி நேபாளம் சென்றார். காத்மாண்டுவில் உள்ள ஒரு இரவு விடுதியில் அவர் காணப்பட்டார். இதனை பாரதிய ஜனதாக கட்சி கடுமையாக விமர்சித்த நிலையில், தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்றதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மே மாத இறுதியில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அந்த பயணத்திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து தேவையான அனுமதி பெறவில்லை என்ற சலசலப்பும் ஏற்பட்டது. இதற்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அரசாங்க விஷயமாக வெளிநாட்டு தூத்துக்குழுவின் ஒருபகுதியாக சென்றால் மட்டுமே மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறவேண்டும் என்றும் விளக்கம் அளித்தார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, இந்திய தூதர்கள் திமிர்பிடித்தவர்களாக மாறிவிட்டதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். மேலும், ஜம்மு-காஷ்மீர் மீதான இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிலுள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கார்பினுடன், ராகுல் காந்தி ஒரு புகைப்படத்தில் காணப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராகுல் காந்தி இன்று வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்குள் அவர் தாயகம் திரும்புவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், ராகுல் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அலுவல் ரீதியிலான பயணம் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் எந்த நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்ற தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் திங்கட்கிழமையும், வரும் 21ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications