ட்ரெஸ்ஸை கிழிச்சு.. தண்ணி கூட தரல.. எம்.பிக்கே இந்த கதியா? - டெல்லியில் கொந்தளித்த ஜோதிமணி!
டெல்லி : டெல்லி காவல்துறையினர் தன்னை மிக மோசமாக தாக்கி தனது ஆடையை கிழித்து வரம்பு மீறி கைது செய்துள்ளனர் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி புகார் தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக இன்று தீவிர விசாரணை நடத்தினர்.
அமலாக்கத்துறை விசாரணை நடவடிக்கையைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடி தர்ணாவில் ஈடுபட்டனர்.

ராகுல் வழக்கு
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மூன்றாவது நாளாக விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்து 3-வது நாளாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு துணை ராணுவப் படையினர், கலவரத்தடுப்பு காவலர்கள் என நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜோதிமணி கைது
இந்நிலையில், கரூர் எம்.பி ஜோதிமணி தலைமையில் ஏராளமான மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடப் பேரணியாகச் செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியும், மீறி பேரணியாகச் சென்றதால் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி எம்.பி, "காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டு பயப்படமாட்டோம்" எனத் தெரிவித்தார்.

ஜோதிமணி புகார்
இந்நிலையில், இன்று நடைபெற்ற போராட்டத்தில் டெல்லி காவல்துறையினர் தன்னை கிரிமினல் போல கைது செய்து ஆடையைக் கிழித்ததாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி புகார் தெரிவித்துள்ளார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட போது அவர் வீடியோ ஒன்றைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
|
ஆடையைக் கிழித்து
அந்த வீடியோவில், "டெல்லி காவல்துறை மிக மோசமாக தாக்கி எனது ஆடையை கிழித்து வரம்பு மீறி கைது செய்து ஏதோ ஒரு இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள். ஒரு மணி நேரமாக தாகம் என தண்ணீர் கேட்டும் எங்களுக்கு தண்ணீர் கூட தர மறுக்கிறார்கள். கடையில் கூட தண்ணீர் வாங்கிக்கொள்ள அனுமதிக்கவில்லை. ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற கொடுமை யாருக்கும் நேரக்கூடாது. எனவே, இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். பின்னர், தான் தற்போது நரேலா காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications