எந்த அவசியமும் இல்லாமல்... எதற்கு வங்கி ஒழுங்குமுறை அவசர சட்டம்... காங்கிரஸ் கேள்வி!!
டெல்லி: எந்த அவசியமும், அவசரமும் இல்லாமல் வங்கி ஒழுங்குமுறை அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதற்கு காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதாவை லோக் சபாவில் கடந்த திங்கள் கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து இருந்தார்.
இதன் மீதான விவாதம் இன்று லோக் சபாவில் நடந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி, ''எந்த அவசியமும், அவசரமும் இல்லாமல் வங்கி ஒழுங்குமுறை அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. இது சட்டத்தை குறைத்து மதிப்பீடு செய்வதற்கு சமம். இந்த மசோதா ஏற்கனவே பரிசீலனையில் இருக்கும்போது, அவசர சட்டம் கொண்டு வருவது எந்த வகையிலும் பகுத்தறிவானதாக இருக்காது'' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக பேசிய நிர்மலா சீதாராமன், ''இக்கட்டான சூழலில் வங்கி டெபாசிட்தாரர்களை பாதுகாக்கும் வகையில் இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளோம். 277 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. 105 கூட்டுறவு வங்கிகள் குறைந்தபட்ச மூலதன நிதியை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. 47 வங்கிகளின் நிகர சொத்து எதிர்மறையாக இருக்கிறது. 328 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் வாராக் கடன் விகிதம் 15%த்திற்கும் அதிகமாக இருக்கிறது'' என்றார்.
மோடியின் 70வது பிறந்த நாள்...கோவையில் பாஜக தயாரித்த 70 கிலோ காவி கலர் லட்டு!