மோடி சொன்ன மாதிரியே அடுத்த வருஷமும் தேசிய கொடியேற்றுவார்.. ஆனால் வீட்டுலதான்.. கார்கே
டெல்லி: செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, அடுத்தாண்டும் இங்கு வருவேன் எனக் கூறியிருந்தார். இதற்குக் காங்கிரஸ் தலைவர் கார்கே நறுக் பதிலைக் கொடுத்துள்ளார்.
இன்று நாடு முழுக்க நாட்டின் 77ஆவது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் பல்வேறு இடங்களிலும் மூவர்ணக் கொடிகள் ஏற்றப்பட்டன. நாட்டு மக்கள் விடுதலை வீரர்கள் நமக்குப் போராடிப் பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தை நினைவு கூர்ந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். செங்கோட்டையில் தொடர்ந்து 10ஆவது ஆண்டாகப் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றுகிறார்.
பிரதமர் மோடி: காங்கிரஸ் கட்சியை சேராத ஒரு பிரதமர் 10ஆவது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றுவது இதுவே முதல்முறையாகும்.. பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார். அப்போது நாட்டு மக்களிடையே உரையாற்றிய நரேந்திர மோடி பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இந்தியாவுக்கு வரும் காலத்தில் மிகப் பெரிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்த மோடி, எதிர்க்கட்சிகளை சாடவும் தவறவில்லை.
பிரதமர் மோடி தனது பேச்சை மணிப்பூர் கலவரம் குறித்தே ஆரம்பித்தார். மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்து பிரதமர் மோடி, "கடந்த சில வாரங்களாக மணிப்பூரில் வன்முறை அலை ஏற்பட்டுள்ளது. அங்குப் பலர் உயிரிழந்தனர். அங்கு நாட்டின் பெண்கள் அவமதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது அப்பகுதியில் அமைதி மெல்லத் திரும்பி வருகிறது. மணிப்பூருடன் ஒட்டுமொத்த இந்தியாவும் துணை நிற்கிறது.
அடுத்தாண்டும் வருவேன்: மக்களுக்கு அதிகாரம் அளிக்கவும், தேசத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.. இந்தியாவின் சாதனைகள் என்ன என்பதை உலகம் இன்று பார்க்கிறது அடுத்த ஐந்தாண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா மாறும் என்பது எனது உத்தரவாதம்.. இந்தியாவின் கனவை நனவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் வறுமையை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மக்கள் ஆசிர்வாதம் இருந்தால் அடுத்த ஆண்டும் வந்து தேசிய கொடியை ஏற்றுவேன் என்று அவர் தெரிவித்தார். அடுத்தாண்டு ஏப்ரல்- மே மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதைக் குறிப்பிடும் வகையிலேயே பிரதமர் மோடி இப்படிப் பேசியிருந்தார்.
கார்கே பதிலடி: இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதற்கு நறுக் பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சிலர் கேட்டதற்கு கார்கே , "அடுத்த ஆண்டு நிச்சயம் அவர் மீண்டும் தேசியக் கொடியை ஏற்றுவார்.. ஆனால், அதை அவர் தனது வீட்டில் தான் ஏற்றுவார்" என்று நக்கலாக பதில் அளித்துச் சென்றார். அவரது இந்த நறுக் பதில் குறித்த வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இன்று செங்கோட்டையில் நடந்த கொடியேற்றும் நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கார்கேவும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது இருப்பினும், அதில் அவர் கலந்து கொள்ளவில்லை. உடல்நலக் குறைவு காரணமாக அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications