‛எஸ்பிஐ-க்கு தேர்தல் பத்திரம் ஒரு விஷயமே இல்ல’.. ஆனா பாஜகவுக்காக ஆட்டம் காட்டுது - விளாசிய காங்கிரஸ்
டெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும் என எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், 4 மாத காலம் அவகாசத்தை எஸ்பிஐ கேட்டிருக்கிறது. வங்கியின் நடவடிக்கை பாஜகவின் முறைகேடுகளை மறைக்கும் வகையில் இருக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். மேலும், இதற்கு எதிராக போராட்டத்தை நடத்தப்போவதாகவும் காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.
தேர்தல் பத்திரம்: அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாகவோ, காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2017-18ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவித்தது.

இதனையடுத்து இது 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கி ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.
உத்தரவு: ஆனால் "தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும்" என்று கூறி தேர்தல் பத்திரங்களுக்கு பிப்ரவரி மாதம் 15ம் தேதி அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். மட்டுமல்லாது, இது தொடர்பான விவரங்களையும் வெளியிட மார்ச் 6ஆம் தேதி வரை அவகாசம் அளித்து ஸ்டேட் வங்கிக்கு உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை மார்ச் 13ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
டைம் கேட்கும் எஸ்பிஐ: ஆனால், தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜுன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும், அதாவது லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு கொடுக்கிறோம் என எஸ்பிஐ உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. மடியில் கனமில்லை எனில் வழியில் பயம் எதற்கு? நீதிமன்றம் கேட்கின்றன விவரங்களை உடனடியாக கொடுக்க வேண்டியதுதானே? என எஸ்பிஐ வங்கியை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன.
காங்கிரஸ் கண்டனம்: எஸ்பிஐ வங்கியின் நடவடிக்கைகள் பாஜகவின் தில்லு முல்லு வேலைகளை மறைப்பதை போன்று இருப்பதாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை மறைக்க எஸ்பிஐ வங்கியை பாஜக கேடயமாக பயன்படுத்துகிறது.
ஒட்டுமொத்தமாக 44,434 பேர் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்திருக்கிறார்கள். யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள்? எந்த கட்சிக்கு கொடுத்தார்கள் என்கிற விவரத்தை வெறும் 24 மணி நேரத்தில் எடுத்துவிட முடியும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஏன் எஸ்பிஐ 4 மாத அவகாசத்தை கோருகிறது? தற்போது விரக்தியில் இருக்கும் பாஜக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஒன்றுமில்லாமல் செய்ய எஸ்பிஐ-யை பயன்படுத்த முயல்கிறது" என்று விமர்சித்துள்ளார்.
"48 கோடி கணக்குகள், 66,000 ஏடிஎம்கள் மற்றும் 23,000 கிளைகளை இயக்கும் எஸ்பிஐ, 22,217 தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்க 4 மாதங்கள் தேவை என்று கேட்பது வினோதமாக இருக்கிறது. வங்கி நினைத்தால், ஒரே கிளிக்கில் ஐந்து நிமிடங்களில் முழுமையான தகவலைப் பெற முடியும்" என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கி தாமதப்படுத்தினால் காங்கிரஸ் போராட்டத்தில் இயங்கவும் தயங்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications