அரசியல் சாசன நாள்: தபால் தலை + சிறப்பு நாணயம் வெளியீடு.. உச்ச நீதிமன்றத்தில் உரையாற்றுகிறார் மோடி
டெல்லி: நாடு முழுவதும் இன்று இந்திய அரசியல் சாசன நாள் கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில், அரசியல் சாசன முன்னுரை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து அரசியல் சாசன நாள் தபால் தலை, சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது. தபால் தலை மற்றும் சிறப்பு நாணயத்தை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டார்.
அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மாலை உச்சநீதிமன்ற அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் பிஆர் கவாய், சூர்யா காந்த் மற்றும் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் கபில் சிபல் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்கள்.

இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று 2 ஆண்டுகள் கழித்து இந்திய அரசியல் அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது, 1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது நமது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாகும்.
சுயாட்சி, ஜனநாயகம் ஆகியவற்றின் விடியலைக் குறிக்கும் நாளாகும். நமது அரசியல் சாசனம் வளர்ந்து வரும் சமூக, அரசியல், பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாட்டின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறது. அரசியலமைப்பு சட்டம், 1950- ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்திய தினத்தை, ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட 75-வது ஆண்டு ஆகும். இந்த அரசியலமைப்பு நாளை சிறப்புடன் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசியல் சாசன நிகழ்வை ஒட்டி உச்ச நீதிமன்றத்திலும் இன்று சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நிர்வாக அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.

அதே போல, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அரசியல் சாசனம் அமலுக்கு வந்து 75 ஆண்டு நிறைவு பெற்றதையொட்டி சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தங்கர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்கியதும், அரசியல் சாசனத்தின் முன்னுரை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து அரசியல் சாசன நாள் தபால் தலை, சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது. தபால் தலை மற்றும் சிறப்பு நாணயத்தை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டார். சமஸ்கிருதம், மைதிலி மொழிகளில் அரசியல் சாசனத்தின் மொழிப்பெயர்ப்பு வெளியிடப்பட்டது. தொடந்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர், நமது அரசியல் சாசனம் சமூக நீதிக்கு வழிவகுப்பதாக கூறினார்.
அரசியல் சாசன நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. எனினும், இது குறித்து சபாநாயகர் ஓம்பிர்லா எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று இரு அவைகளின் சிறப்பு அமர்வு நடைபெறுவதால், குளிர் கால கூட்டத்தொடரில் இன்று வழக்கமான அமர்வு நடைபெறாது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் பிஆர் கவாய், சூர்யா காந்த் மற்றும் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் கபில் சிபல் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்கள்.












Click it and Unblock the Notifications