மூன்று நாட்களுக்கு பிறகு.. மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - மத்திய அரசு கலக்கம்
டெல்லி: இந்தியாவில், கடந்த மூன்று நாட்களாக வைரஸ் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் படுக்கை, ஆக்சிஜன், ரெமிடிசிவிர் மருந்துகளின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், தினம் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, டெல்லியில் இதுவரை சுமார் 40 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவு ஆக்சிஜனை அளிக்காமல் இருப்பதே இதற்குக் காரணம் என டெல்லி அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதனால், குஜராத்தில் இருந்து ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ரயில்கள் டெல்லிக்கு வந்துள்ளன.

2ம் தேதி முதல்
அதேசமயம், நாட்டில் கடந்த மே 1ம் தேதி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டி பதிவானது உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலகில் எந்தவொரு நாட்டிலும் ஒரேநாளில் இப்படியொரு பாதிப்பு எண்ணிக்கை பதிவாகவில்லை. எனினும், கடந்த மே 2ம் தேதியில் இருந்து தொடர்ந்து பரவல் குறைந்து வந்தது.

ஆறுதல் தந்த செய்தி
அன்றைய தினம் 3 லட்சத்து 92 ஆயிரத்து 488 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மே.2ம் தேதி 3 லட்சத்து 68 ஆயிரத்து 147 ஆக பதிவானது. நேற்று (மே.4) பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 ஆக பதிவானது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருந்தது. ஆனால், இன்று கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.

3 நாட்களுக்கு பிறகு
இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 3 லட்சத்து 38 ஆயிரத்து 439 பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர். எனினும் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,780- பேர் உயிரிழந்துள்ளனர்.

அரசு கவலை
இதன்மூலம், இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 06 லட்சத்து 65 ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 1 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 731 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் 2 லட்சத்து 26 ஆயிரத்து 188 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 34 லட்சத்து 87 ஆயிரத்து 229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications