மார்ச் 18 முதல் 31 வரை.. இந்தியா முழுக்க லாக் டவுன்.. இணையம் முழுக்க தீயாக பரவிய வதந்தி!
இந்தியாவில் நாடு முழுக்க மத்திய அரசால் லாக் டவுன் செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று பொய்யான சுற்றறிக்கை ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
டெல்லி: இந்தியாவில் நாடு முழுக்க மத்திய அரசால் லாக் டவுன் செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று பொய்யான சுற்றறிக்கை ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
Recommended Video
கொரோனா வைரஸை கூட கட்டுப்படுத்த முடிகிறது. அதை கூட எங்களால் மருந்து மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆனால் இந்த கொரோனா தொடர்பான வதந்திகளைத்தான் கட்டுப்படுத்த முடியவில்லை. வதந்திகளை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்து இருந்தது.
அதற்கு ஏற்றபடி இந்தியாவில் நிறைய வதந்திகள் பரவி வருகிறது. சிக்கன், மட்டன் சாப்பிட்டால் கொரோனா பரவும், ரசம், கோமியம் குடித்தால் கொரோனா குறையும் என்று நிறைய வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
வதந்தி
அப்படி நேற்று வந்த வதந்திதான் இந்தியாவில் லாக் டவுன் என்பது. லாக் டவுன் என்றால் எமர்ஜென்சி போல மொத்தமாக இந்தியாவில் எல்லாம் மூடப்படும். 144 போல கடைகள் எல்லாம் மூடப்படும். அலுவலகங்கள் எதுவும் இயங்காது. மக்கள் வெளியே செல்ல முடியாது. பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் எதுவும் இயங்காது. அதன்படி இந்தியாவில் இந்த மொத்த கட்டுபாடு விதிக்கப்படுகிறது என்று நேற்று செய்திகள் வந்தது.
சுற்று அறிக்கை
இதற்கான சுற்று அறிக்கை ஒன்றும் வெளியானது. இந்த சுற்று அறிக்கை முழுக்க முழுக்க பொய்யானது ஆகும். இதில் மார்ச் 18 முதல் 31ம் தேதி நாடு முழுக்க தடை உத்தரவு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகிறது. மக்கள் வெளியே செல்ல கூடாது. அலுவலகங்கள் இயங்காது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏடிஎம், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய விஷயங்கள் மட்டுமே செயலில் இருக்கும் என்று இதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இது இணையம் முழுக்க வைரலானது
அரசு மறுப்பு
இதை இணையத்தில் இந்தியர்கள் பலர் ஷேர் செய்து வந்தனர். இந்த நிலையில், இந்த தகவல் பொய்யானது. இப்படி சுற்றறிக்கை எதையும் வெளியிடவில்லை என்று மத்திய அரசு விளக்கி உள்ளது. இந்தியாவில் லாக் டவுன் கொண்டு வரப்படவில்லை. சில ரயில்கள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. எங்கும் முழுவதுமாக லாக் டவுன் கொண்டு வரப்படவில்லை. இதை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
யாருடையது
இந்த நிலையில் இந்த சுற்றறிக்கை மலேசிய அரசு வெளியிட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதைத்தான் சமூக வலைத்தளத்தில் சில விஷமிகள் கட் செய்து, இந்தியாவுடைய சுற்றறிக்கை என்று பொய்யாக பரப்பி வருகிறார்கள்.